ஆடு 3: திரை விமர்சனம்
ஜெயசூர்யா, விநாயகன் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஆடு 3' மலையாள திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

கதைக்களம்
2025யில் ஷாஜி பாப்பனும் (ஜெயசூர்யா) அவரது கூட்டாளிகளும் பணம் தொடர்பான குற்றத்திற்காக தமிழ்நாட்டில் மாட்டிக் கொள்கின்றனர். நீதிமன்றத்தில் அவர்கள் பேசுவதில் குழப்பம் ஏற்பட்டு, எப்படியோ இவர்களை விடுவித்து கேரளாவுக்கு அனுப்பினால் போதும் என்ற மனநிலையில் நீதிபதி (லிவிங்ஸ்டன்) தீர்ப்பு கொடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து ஷாஜி பாப்பன் தனது கூட்டாளிகளுடன் கேரளாவுக்கு வருகிறார். அதே சமயம் டியூட் (விநாயகன்) என்று அழைக்கப்படும் ஒரு கேங்ஸ்டர், தனது குழுவுடன் ஒரு பொருளை தேடுகிறார்.

அதே பொருளை சாத்தான் சேவியர் என்ற மற்றொரு நபரும், கேட் லாரா என்ற ஃபாரின் கேங்கைச் சேர்ந்த பெண்ணும் தேடுகிறார்கள். இந்த கும்பல்களின் தனித்தனி தேடல்களில் குழப்பங்கள் ஏற்பட, எதிர்காலத்தில் இருந்து பாபா (இந்திரன்ஸ்) என்ற நபர் தனது குழுவுடன் டைம்லைனில் அந்த பொருளால் ஒரு மாற்றம் ஏற்படப் போகிறது என்று கூறுகிறார்.
இதற்கிடையில், வழக்கம் போலவே பாப்பனும் அவரது கும்பலும் இந்த குழப்பத்திலும் சிக்கிக் கொள்கின்றனர். ஆனால் இம்முறை ஒரு வித்தியாசம். அவர்கள் இந்த பிரச்சனையில் இன்று சிக்கியதன் தொடக்கம் 1790யில்.

அந்த ஆண்டில் நடக்கும் ஒரு நிகழ்வு நிகழ்காலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. அந்த காலகட்டத்தில் அரசனாக இருந்த ஷாஜி பாப்பனும், சுல்தானாக இருந்த டியூட்டும் என்ன செய்தார்கள்? அதன் விளைவு என்ன என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
ஆடு சீரிஸின் மூன்றாவது பாகமாக ஒன் லாஸ்ட் ரைடு - பார்ட் 1 என இப்படத்தை இயக்கியுள்ளார் மிதுன் மானுவல் தாமஸ். காமெடி ஜானர் கதையை பேண்டஸிக்குள் கொண்டு சென்று, படம் முழுக்க ரசிக்க வைக்க வேண்டும் என்பதில் ஜெயித்திருக்கிறார் என்றே கூறலாம்.
கடந்த பாகங்களில் கதாபாத்திரங்களுடன் பார்வையாளர்கள் ஒன்றிவிட்டதால், மூன்றாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஒவ்வொரு காட்சியையும் கொண்டாடுகின்றனர். இம்முறை காமெடியைத் தாண்டி ஆக்ஷ்ன் மற்றும் விஷுவல் எப்பெக்ட்ஸுக்கு இயக்குநர் மெனக்கெட்டுள்ளார். அவை படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவியிருக்கிறது.
நடிகர்களை பொறுத்தவரை ஹீரோ ஜெயசூர்யாவும், விநாயகனும் வழக்கம்போல் நிகழ்காலத்தில் பட்டையை கிளப்பியுள்ளனர். அதற்கு நேர்மாறாக விநாயகன் வரலாற்று காலகட்டத்தில் கொடூரமான சுல்தான் என்பதை தனது உடல்மொழியிலேயே வெளிப்படுத்துகிறார்.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசியைப் போல ஜெயசூர்யா பத்மநாப தம்புரான் மஹாராஜாவாக இருந்திருக்கிறார். அவரது அறிமுகமே சிரிப்பலை தான். என்றாலும் அடுத்தடுத்து அவரது நகர்வுகள் கவனித்து பார்க்க வைக்கின்றன. ஆரம்ப காட்சியில் லிவிங்ஸ்டன் நீதிபதியாக வந்தது போல, தமிழ் நடிகர்களான சம்பத் ராம், கிரேன் மனோகர் ஆகியோர் கலகலப்பூட்டுகிறார்கள்.
குறிப்பாக விநாயகனை ஒரு கருவியை வைத்து கிரேன் மனோகர் கண்ட்ரோல் செய்யும் காட்சிகள் எல்லாம் அலப்பறை ரகம். அதிலும் விநாயகன் பேசும் மலையாளத்தை தவறாக புரிந்துகொண்டு 'டேய் இது டீ எஸ்டேட் இல்லடா, அன்னாசி பழம்' என்று அவர் கூறுவது குபீர் மொமெண்ட். இந்திரன்ஸ், ரெஞ்சி பனிக்கர், சுதி கொப்பா, ஹரிகிருஷ்ணன், பகத் மனுவல், தர்மாஜன், சன்னி வெய்ன், விஜய் பாபு, சைஜு குரூப் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

இவர்களில் அஜூ வர்கீஸை மட்டும் இயக்குநர் டீலில் விட்டதுபோல் பெரிதாக எதுவும் செய்யவில்லை. இவர்களைத் தாண்டி ஃபாரின் கேங்ஸ்டராக வரும் ஆலியா போர்ன் அதிரடி சண்டைக்காட்சியில் மிரள வைக்கிறார்.
வேதிகா ஒரு பாடலுக்கு வந்து குதூகலப்படுத்துகிறார். கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஓடக்கூடிய படமாக இருப்பதால், என்னதான் காமெடி ஒர்கவுட் ஆனாலும் சில இடங்களில் சலிப்பை உணர முடிகிறது. அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு, ஷான் ரஹ்மானின் பாடல்கள் மற்றும் டான் வின்சென்டின் பின்னணி இசை சிறப்பு. இது மூன்றாவது பாகமாக இருந்தாலும் இதற்கே பார்ட் 2 உள்ளது என்றுதான் கிளைமேக்ஸை வைத்திருக்கிறார் இயக்குநர். இது அடுத்த பாகத்திற்கான எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறது.
க்ளாப்ஸ்
நடிகர்களின் பங்களிப்பு
காமெடி காட்சிகள்
டெக்னிக்கல் விஷயங்கள்
இசை
பல்ப்ஸ்
ஒரு சில இடங்களில் திரைக்கதையில் தொய்வு
மொத்தத்தில் காமெடி பேண்டஸி படமாக இந்த ஆடு 3 குஷிப்படுத்தியுள்ளது. கண்டிப்பாக குடும்பத்துடனும், நண்பர்களுடன் சென்று பார்த்து மகிழலாம்.
