ஜீ5 ஓடிடி தளத்தில் 30 மில்லியன் கடந்த “அகிலன்”! வித்தியாசமாக நடந்த ப்ரமோஷன்
ஜீ5 ஓடிடி தளத்தின் சமீபத்திய வெளியீடான ‘அகிலன்’ படத்தின் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கொண்டாடும் விதமாக, ஒரு வித்தியாசமான விளம்பர நிகழ்வை சென்னை மெரினா மாலில் நடத்தியுள்ளது ஜீ5 நிறுவனம். இந்த நிகழ்வில் 5000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு ஜீ5 தளத்தின் ஒரு வருட வாடிக்கையாளர் சந்தாவை வென்றுள்ளனர்.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் ‘அகிலன்’ திரைப்படம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அடுத்து, ஜீ5 தளத்தில் உலகம் முழுதும் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்பட்டது.
ஜெயம் ரவி அப்பா மகனாக கலக்கிய இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், ஹரிஷ் உத்தமன், தன்யா ரவிச்சந்திரன், சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். அசத்தலான ஆக்சன், பரபரப்பான திருப்பங்களுடன் அட்டகாசமான கமர்ஷியல் படமாக இப்படம் ஜீ5 ஓடிடியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறுகிய காலத்தில் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
அகிலன் படத்தின் வரவேற்பை கொண்டாடும் வகையில், மிக வித்தியாசமான கொண்டாட்ட நிகழ்வை ஜீ5 நிறுவனம் நடத்தியுள்ளது. சென்னை மெரினா மாலில் ‘அகிலன்’ படத்தின் கதைக்கருவில் வரும் கப்பல் நங்கூரம் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இந்த நங்கூரத்தை குறிப்பிட்ட நேரம் தூக்கி வைத்திருப்பவர்களுக்கு ஒரு வருடத்திற்கான ஜீ5 தளத்தின் சந்தா இலவசமாக வழங்கப்பட்டது.
மிகவும் வித்தியாசமான முறையில் நடந்த இந்நிகழ்வில் 5000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர். பலரும் குடும்பத்தோடு கலந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, அகிலன் படத்தின் விழாவை கொண்டாடினர்.

