பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாச்சாரம் இருக்கிறதா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
முன்னணி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது ஆடை குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா லட்சுமி
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழில் வெளிவந்த 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆடை குறித்த விமர்சனம்
கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வைர நகை கண்காட்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த ஆடை குறித்து சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் சிலர் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களை பரப்பி வந்தனர்.

இந்த நிலையில், சர்ச்சைகளுக்கு பதிலடி தரும் வகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசியுள்ளார்.
அவர் கூறியது, "அந்த நிகழ்ச்சியில் புகைப்படம் கலைஞர்கள் எனது முகத்தில் கவனம் செலுத்தாமல், தவறான கோணங்களில் புகைப்படங்கள் எடுப்பதில் கவனம் செலுத்தினார்கள். இதனால் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. ஒரு சங்கடப்படும்போது அவர்களின் உடலமைப்பில் அசைவு இயல்பாகவே மாறிவிடும். எனது தனிப்பட்ட எல்லை மீறப்பட்டதாகவே நான் உணர்ந்தேன். நான் அணிந்திருந்த ஆடையால் எனக்கு எந்தவிதமான சங்கடமும் இல்லை; ஆனால், அங்கு இருந்தவர்களின் தவறான செயல்களால்தான் நான் சங்கடப்பட்டேன் என்பதை இணையத்தில் விமர்சித்தவர்கள் புரிந்துகொள்ள தவறிவிட்டனர்."
"சங்கடமாக இருந்தால் ஏன் அப்படி ஒரு ஆடையை அணிய வேண்டும் என பலரும் என்னிடம் கேள்வி கேட்டனர். ஒரு பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாச்சாரம் இருக்கிறதா? நம்முடைய நடத்தையில் கலாச்சாரம் இல்லையா? பெண்ணைகளை பற்றி தவறான கருத்துக்களை பேசுபவர்களை கண்டிக்க இங்கு யாருமில்லை. ஆனால், பெண்கள் மட்டும் தங்கள் ஆடையிலும் தோற்றத்திலும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்."
"ஆரம்பத்தில், இந்த விமர்சனங்களை நான் சிரித்துக்கொண்டே கடந்துவிட்டேன். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இது பெரிய விவாதமாக மாறியது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. நாட்டின் ஜிடிபி வளர்ச்சியை பற்றியோ, முதியோர் இல்லங்களில் பெற்றோர்கள் கைவிடப்படுவதை பற்றியோ பேசுவதற்கு இங்கு யாருக்கும் நேரமில்லை. ஆனால், ஒரு பெண்ணின் ஆடையை பற்றி பேசுவதற்கு மட்டும் அனைவருக்கும் நேரம் இருக்கிறது" என விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். இவருடைய பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.