அன்பே டயானா திரை விமர்சனம்
ஜமா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் பாரி இளவழகன், இயக்கி ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம்தான் அன்பே டயானா. எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
சென்னை பெரம்பூரில் வாழ்ந்து வரும் பாரி இளவழகன், அங்கே வசிக்கும் ஆங்கிலோ இந்தியனான ரம்யா ரங்கநாதனை கல்லூரி காலம் முதல் காதலித்து வருகிறார்.
எதற்கெடுத்தாலும் 'நம்ம ஆளுங்க' என சாதியை பற்றி பேசும் தாய் ரோஜாவிடம், தன்னுடைய காதலை பற்றி சொல்ல முடியாமல், தவித்து வருகிறார். சொன்னால் பிரச்சனை ஆகிவிடுமோ என்று குழப்பத்திலேயே உள்ளார் பாரி.

இதற்கிடையில் தனது மகன் பாரிக்கு தன்னுடைய தம்பி மகளை ரோஜா திருமணம் செய்து வைக்க பேசி முடித்துவிடுகிறார். இதுவரை ஒருதலை காதலாக இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் பாரியின் காதலை ஏற்றுக்கொள்கிறார் ரம்யா.
இப்படியொரு சூழலில் பாரி என்ன முடிவு எடுத்தார்? ரம்யாவுடனான காதலை அம்மாவிடம் கூறி சம்மதம் வாங்கினாரா? இல்லை தனது அம்மா பார்த்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டாரா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் பாரி இளவழகன் தனது துடிப்பான நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார். நகைச்சுவை, நடனம், எமோஷன் என அனைத்திலும் பட்டையை கிளப்பியுள்ளார். கதாநாயகி ரம்யா ரங்கநாதன் அழகிய நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். இவர்களை தாண்டி நடிகை ரோஜா மற்றும் நடிகர் சேத்தனின் நடிப்பே படத்திற்கு மிகப்பெரிய பலம்.
மேலும் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு உள்ளிட்ட அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகளின் நடிப்பிலும் எந்த குறையும் இல்லை. இயக்குநராக இப்படத்தை சிறப்பாக எடுத்துள்ளார் பாரி. மெதுவாக செல்லும் முதல் பாதி திரைக்கதை நம் பொறுமையை சோதிக்கிறது.

ஆனால், இடைவேளைக்கு பின் திரைக்கதை வேற லெவல். காதல், எமோஷன், நகைச்சுவை என ஒவ்வொரு காட்சியையும் அழகாக செதுக்கியுள்ளார். கதாபாத்திரங்களின் வடிவைப்பு சிறப்பாக இருந்தது.
பெரம்பூரில் வெவ்வேறு மொழிகளை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுடைய பேச்சு, நடை, உடை பாவனையை காட்டிய விதம் சிறப்பு. நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் என்ட்ரி தந்துள்ள நடிகை ரோஜா நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். அதேபோல் நடிகர் சேத்தன், ஒரு பக்கம் நகைச்சுவையாகவும், மறுபக்கம் தனது மகனுக்கு துணையாக இருக்கும் ஒரு தந்தையாக சிறப்பாக நடித்துள்ளார்.

காதல் காட்சிகளில் கதாநாயகனும், கதாநாயகியும் சந்திக்கும் அழுத்தம், கதாநாயகன் தனது காதலை வீட்டில் சொல்ல போராடிய காட்சிகள், நகைச்சுவையான காட்சிகள் மூலம் திரைக்கதையை கொண்டு சென்ற விதம், அதில் வைத்த சில ட்விஸ்ட் என எல்லாம் ரசிக்கும்படியாக இருந்தது. குறிப்பாக படத்தின் கடைசி 30 நிமிடங்கள் வேற லெவல்.
சாதி மீது ரோஜா வைத்திருந்த சிந்தாத பார்வை மாறும் விதத்தை காட்சிப்படுத்தியிருந்த விதம், ஒரு நபர் முக்கியமில்லை, அந்த நபரின் குணம் தான் முக்கியம் என புரிந்துகொள்ளும் காட்சியும், அதை இயக்கிய விதமும் படத்தின் பிளஸ் பாயிண்ட்ஸ்.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட் இப்படத்தை மிகவும் அழகாக திரையில் காட்டியுள்ளார். அதேபோல் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். மேலும் மற்ற டெக்னீகள் விஷயங்களும் குறை சொல்லும் அளவிற்கு இல்லை.
பிளஸ் பாயிண்ட்ஸ்
நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு, குறிப்பாக ரோஜா மற்றும் சேத்தனின் நடிப்பு சிறப்பு.
இடைவேளை காட்சி மற்றும் இரண்டாம் பாதி.
திரைக்கதையை அழகாக நகர்த்தி சென்ற கலகலப்பான காட்சிகள்.
எமோஷனல் காட்சிகள்.
படத்தின் கடைசி 30 நிமிடங்கள்
மைனஸ் பாயிண்ட்ஸ்
மெதுவாக செல்லும் முதல் பாதி
மொத்தத்தில் இந்த 'அன்பே டயானா' சிரிக்கவும் வைத்தது, சிந்திக்கவும் வைக்கிறது. கண்டிப்பாக பார்க்கலாம்.
