"நவரசா" ஆந்தாலஜி, பெரும் வரவேற்பில் "ரௌத்திரம்" மகிழ்ச்சியில் அரவிந்த்சாமி !
Netflix தளத்தில், தமிழில் வெளியாகியுள்ள "நவரசா" ஆந்தாலஜி தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மனிதர்களின் அடிப்படை உணர்வுகளான 9 ரசங்களின் அடிப்படையில் 9 குறுங்கதைகள் இதில் வெளிவந்துள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடசத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் அரவிந்த்சாமி, முதல் முறையாக இந்த ஆந்தாலஜி மூலம், இயக்குநராக மாறியுள்ளார். கோபத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள "ரௌத்திரம்" பகுதியை அவர் இயக்கியுள்ளார்.
புதுமையான கதை சொல்லல், அருமையான இயக்கம் என "ரௌத்திரம்" பார்வையாளர்களிடம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. முதல் இயக்கத்தில் உருவான படைப்பு பாராட்டுக்களை குவிப்பதில், மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் இயக்குநர் அரவிந்த்சாமி.
தனது அறிமுக இயக்கம் குறித்து, நடிகர், இயக்குநர் அரவிந்த்சாமி கூறியதாவது... 90 களின் ஆரம்பத்தில் இருந்தே இயக்கத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்து வந்தது. மணி சார் நவரசா குறித்து என்னுடன் பேசியபோது நான் அதில் பங்கேற்க முடியுமா, எனக் கேட்டார். நான் அவரிடம் இயக்குநராகவா அல்லது நடிகராகவா எனக் கேள்வி எழுப்பினேன். அது உன்னுடைய தேர்வு தான் என்று கூறிவிட்டார்.
இப்படித்தான் இயக்குநராக எனது பயணம் துவங்கியது. இயக்குநராக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். படைப்பை உருவாக்குவதில் எதைப் பற்றியும் எந்த சந்தேகமோ, தயக்கமோ, என்னிடம் சுத்தமாக இல்லை. பல ஆண்டுகளாக நான் பல திறமையான இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பணிபுரிந்ததது தான் அதற்கு காரணம்.
உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் எப்பொழுதும் அது குறித்து, கவனித்து கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும், மற்றும் அதற்கான வாய்பு வரும் போது, தயங்காமல் ஏற்றுக்கொண்டு செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில் இப்படைப்பை உருவாக்கியது மிக மகிழ்ச்சியாக இருந்தது.
ஆந்தாலஜியில் கோபத்தை நான் தான் தேர்ந்தெடுத்தேன் அதற்கு காரணம் வழக்கத்தை மீறி ஏதாவது செய்ய, கோபம் ஏற்றதாக இருக்குமென்று நினைத்தேன். ஒரு ஐடியா என்னுள் தோன்றியது. கோபம் கிடைத்தால், அதை முன்வைத்து ஒரு கதையை கூறலாம் என்று முடிவு செய்தேன். அது நிறைவுபெற்று, இப்போது எனது படைப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.