Bandar (இந்தி) : திரை விமர்சனம்
Bandar (இந்தி) : திரை விமர்சனம்
இயக்கத்தில் வெற்றிக்காக தடுமாறி வந்த பாலிவுட்டின் ஸ்டார் இயக்குநரான அனுராக் காஷ்யப், பந்தர் படம் மூலம் எப்படி காம்பேக் கொடுத்துள்ளார் என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
சமர் மெஹ்ரா (பாபி தியோல்) ஒரு காலத்தில் நட்சத்திரமாக இருந்து, தற்போது தனது 50 வயதில் திருமணங்களில் கச்சேரி நடத்தும் நிலையில் உள்ளார். ஆனாலும், அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் வசதியான வாழ்க்கையை வாழ்வது போல் காலத்தை ஓட்டுகிறார். தனக்கு ஒரு துணை வேண்டும் என்று நினைக்கும் சமர், டேட்டிங் ஆப்பில் குஷி என்ற பெண்ணை சந்திக்கிறார்.

அவரும் அவர் காதலாக பழகி வரும் சூழலில், ஒருநாள் சமரின் வீட்டிற்கு வரும் போலீஸ் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கின்றனர். அங்கு, அவர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதனைக் கேட்டு அதிர்ச்சியடையும் சமர், தான் நிரபராதி என்று மன்றாடுகிறார்; ஆனாலும் அவர் 15 நாட்கள் காவலில் வைக்கப்பட நேரிடுகிறது. அதன் பின்னர் தன்னை குற்றமற்றவர் என்று சமர் நிரூபித்தாரா? ஏன் அவர் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற கேள்விகளுக்கு விடையே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
பாலிவுட்டில் வித்தியாசமான கதைக்களத்தில் படங்களை கொடுக்கக்கூடிய இயக்குநரான அனுராக் காஷ்யப், சமீப காலமாக பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இந்த முறை பந்தர் படத்தின் மூலம் தன்னை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார் என்றே கூறலாம்.
பந்தர் என்றால் கூண்டில் அடைக்கப்பட்ட குரங்கு என்று பொருள். அதனைப் போல், பொய் புகாரில் சிறையில் அடைக்கப்படும் ஹீரோ, தன்னை நிரபராதி என்று நிரூபித்தாரா என்பது ஒன்லைன் ஆக இருந்தாலும் நான்-லீனியர் திரைக்கதையில் சுவாரஸ்யப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

ஹீரோவின் அறிமுக காட்சியிலேயே அவரது கேரக்டர் குறித்து காட்டப்படுவதால், ஒருவேளை இவர் குற்றம் செய்திருப்பாரோ என்றும் தோன்ற வைக்கும்.
அந்த அளவிற்கு கடைசிவரை திரில்லர் மோடிலேயே படத்தை கொண்டு சென்றுள்ளார் அனுராக் காஷ்யப். முதல் பாதியில் சிறையில் பாபி தியோல் அனுபவிக்கும் துன்பங்களை பார்க்கும்போது நமக்கே ஒருவித பயம் ஏற்படும் அளவிற்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படத்திற்கு வசனங்களும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. முதல் காட்சியை இரண்டாம் பாதியில் இணைத்த விதம் அருமை.
சிறையின் கோர முகம் நுட்பமாக காட்டப்பட்டுள்ளது. ஹீரோவுக்கு இருக்கும் ஒரு சில பிரச்சனைகளுக்கான பின்கதையை கூறியிருக்கலாம். என்றாலும் அவர் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் பார்வையாளர்கள் நினைக்கும் போது இறுதியில் ஒரு ட்விஸ்ட் காத்திருக்கும்.

நடிகர்களை பொறுத்தவரை பாபி தியோல் புகுந்து விளையாடியிருக்கிறார். பாவமாக அடி வாங்கும்போதும், ஹீரோயினிடம் கெத்து காட்டும்போதும் என வித்தியாசங்களை காட்டுகிறார். காயத்ரியாக வரும் சப்னா பப்பி இப்படி ஒரு பெண்ணா என்ற மிரள வைக்கிறார். வடசென்னை படத்தில் வரும் கிஷோர் கதாபாத்திரத்தைப் போல் இந்திரஜித் சிறையில் தனி ஆட்சி செய்கிறார்.
ராஜ் பி.ஷெட்டி போதைப்பொருள் புகைக்கும் நபராக யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்; எனினும் அவரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். அண்ணனை காப்பாற்ற போராடும் சான்யா மல்ஹோத்ரா, காதலியாக வரும் சபா அஸாத், ஜிதேந்திரா ஜோஷி, ரித்தி சென் ஆகியோர் கச்சிதமான நடிப்பை தந்துள்ளனர்.
ஷிவஹரி வர்மாவின் பின்னணி இசை மிரட்டல். சையத் ஷாஸ் ரிஸ்வியின் ஒளிப்பதிவு, ஆர்த்தி பஜாஜின் படத்தொகுப்பு சிறப்பு.
க்ளாப்ஸ்
நடிகர்கள் திரைக்கதை கிளைமேக்ஸ் பின்னணி இசை
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் இந்த பந்தர் ஒரு ஹிட் சிக்ஸர். திரில்லர் விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங்: 3.25/5