பாரதநாட்யம் 2 மோஹினியாட்டம்: திரை விமர்சனம்
மலையாளத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் பாரதநாட்யம் 2 மோஹினியாட்டம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
பரதன் நாயரின் மறைவுக்குப் பின்னர், அவரது மகனான சசிதரன் ருக்மிணி மற்றும் அவரது மகனின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக, தனது குடும்பத்துடன் ஸ்ரீகண்டபுரத்திற்குப் பயணிக்கிறார்.
ஒரு புதிய வீட்டில் பரதன் நாயரின் இரண்டாவது குடும்பத்தை குடியமர்த்த முயற்சிக்க, கோவிந்தராஜா என்பவர் இரகசியம் ஒன்றை கண்டுபிடிக்கிறார். அதனை வைத்து சசிதரனின் குடும்பத்திடம் பிளாக்மெயில் செய்து லட்சக்கணக்கில் பணம் கேட்கிறார். அவரை சமாளிக்க முடியாமல் குடும்பமே சேர்ந்து தாக்குகின்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கோவிந்தராஜா இறந்துபோகிறார். இது சசிதரனுக்கு தெரிய வர தனது குடும்பத்தை காப்பாற்ற, சடலத்தை அப்புறப்படுத்த முயற்சி மேற்கொள்கிறார். ஆனால், கோவிந்தராஜாவின் உறவுக்கார பையனான சுபாஷிற்கு தனது மாமா காணாமல் போனதற்கு சசிதரனின் குடும்பம் தான் காரணம் என சந்தேகித்து பின் தொடர்கிறார்.
இதனால் சடலத்தை அப்புறப்படுத்த முடியாமல் வீட்டிலேயே வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன் பின்னர் எப்படி கொலையை மறைத்தார்கள்? சசிதரனின் குடும்பம் தப்பித்ததா இல்லையா? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
2024யில் வெளியான பாரதநாட்யம் படத்தின் இரண்டாம் பாகமாக, அப்படத்தை இயக்கிய கிருஷ்ணதாஸ் முரளி, விஷ்ணு R.பிரதீப்புடன் இணைந்து எழுதி இயக்கியிருக்கும் படம்தான் இது.
படம் முழுக்க காமெடி கலாட்டாதான். ஒவ்வொரு நடிகரின் முகபாவனைகளும், வசன உச்சரிப்பும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. புராண கதையில் ராமர் மிக்சர் சாப்பிட்டார் என்று சுராஜ் கூறும் காட்சி பிளாஸ்ட் காமெடி மொமெண்ட். ஆரம்பத்தில் வசனங்கள் பேசி வில்லத்தனம் காட்டும் சுராஜ், கொல்லப்பட்ட பின் சடலமாக நடித்து சிரிக்க வைக்கிறார்.

கலாரஞ்சினி அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டு செய்யும் விஷயங்கள் எல்லாம் மொரட்டு சம்பவங்கள் என்றே கூறலாம். கூலி பட ரெபரென்ஸை வைத்து ஜெகதீஷ் செய்யும் விஷயம் செம. அதேபோல் வினய் ஃபோர்ட் சில காட்சிகளில் வந்தாலுமே தனது பங்குக்கு காமெடி வெடியை கொளுத்தி போடுகிறார்.
சசிதரனாக சைஜு குரூப் படம் முழுக்க குடும்பத்தை காப்பாற்ற போராடுவதால் பயத்துடன் காணப்படுகிறார். ஆனால், கிளைமேக்சில் அவர் விஷயம் செய்துவிட்டு உடல்மொழி மாறும்போது மாஸ் காட்டுகிறார். பரதன் நாயரின் குடும்ப உறுப்பினர்களாக நடித்த அனைவருமே மிரட்டியிருக்கிறார்கள்.

என்றாலும் பேபி ஜீன் சோலோ ஃபர்பார்மன்ஸ் செய்து திரையரங்கை அதிர விடுகிறார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியுமே அடிப்பொலி மொமெண்ட் தான்.
கொலையை மறைக்க சில விஷயங்களை செய்துவிட்டு, ஒவ்வொருவரும் வாட்ஸ்அப் குழுவில் தம்ப்ஸ்அப் செய்வதும், அதற்கு "Ffaah" என்ற ட்ரெண்டிங் சவுண்டை வைத்ததும் அல்டிமேட் ஐடியா. டெக்னிக்கலாக படம் வலுவாக உள்ளது. படம் முழுக்க ரோலர் கோஷ்ட் ரைடு உணர்வை தந்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணதாஸ் முரளி.
க்ளாப்ஸ்
காமெடி காட்சிகள்
நடிகர்களின் பங்களிப்பு
ட்விஸ்ட் மொமெண்ட்
தொய்வில்லாத திரைக்கதை
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் இந்த பாரதநாட்யம் 2 மோஹினியாட்டம் காமெடியில் சிறந்த அரங்கேற்றம் செய்துள்ளது. கண்டிப்பாக குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படம்தான்.
