கவிஞர் புவியரசு காலமானார்.. அரசு மரியாதை அறிவித்த முதலமைச்சர் விஜய்
கவிஞர் புவியரசு
சாகித்ய அகாடமி விருதை இரு முறை பெற்றவரும், 'வானம்பாடி' இயக்கத்தின் முன்னோடி கவிஞர்களில் ஒருவரும், எழுத்தாளருமானவர் புவியரசு. இவருக்கு வயது 96. வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.

கவிஞர் புவியரசுவின் மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவரது இறுதி சடங்கு இன்று பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கல் எரியூட்ட மயானத்தில் நடைபெறுகிறது.
முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிக்கை
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது இரங்கலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான திரு. புவியரசு மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். சமூக பொறுப்பை வலியுறுத்துகின்ற கவிதைகளாலும், உலக இலக்கிய செல்வங்களை தமிழுக்கு கொண்டுவந்த மொழிபெயர்ப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் புவியரசு அவர்கள்."
"கையெப்பம் என்ற கவிதை தொகுப்பிற்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதும், 'புரட்சிக்காரன்' என்ற மொழிபெயர்ப்பு நூலிற்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதும் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்."

"கவிஞர் புவியரசு அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகை சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்."
"இலக்கிய துறையில் திரு. புவியரசு அவர்களின் பங்களிப்பை போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்" என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
