48 மணி நேரத்தில் முழு படமும் முடித்து திரையிடப்பட இருக்கும் உலக சாதனை திரைப்படம் ‘டெவிலன்’!
டெவிலன் படம்
48 மணி நேரத்தில் ஒரு படத்தை முடித்து வெளியிடுவது என்ற மிகப்பெரிய சவாலை வெற்றிகரமாக செய்து முடிப்போம்! - ‘டெவிலன்’ இயக்குநர் பிக்கய் அருண் நம்பிக்கை.
மிகப்பெரிய ரிஸ்க்காக இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதில் இறங்கியிருக்கிறேன்
டெவிலன்’ மூலம் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள சீகர் ராஜ்குமார் ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்து பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் தயாரிப்பாளரும், நடிகருமான ராஜ்குமார் மற்றும் இயக்குநர் பிக்கய் அருண் ஈடுபட்டுள்ளனர்.
’டெவிலன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை (மே 29) மாலை 3 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் (மே 30) மாலை 3 மணி வரை நடைபெறும்.
3 மணி முதல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கி, மே 31 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, சரியாக மே 31 ஆம் தேதி, மாலை 3 மணிக்கு படத்தை திரையிடுவார்கள். இதுவரை திரைப்படத்துறை வரலாற்றில் யாரும் செய்திராத இத்தகைய சாதனை முயற்சி நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற உள்ளது.
’எக்ஸ்ட்ரீம்’ மற்றும் ‘தூவல்’ ஆகிய படங்களை தயாரித்த சீகர் பிக்சர்ஸ் கமலகுமாரி.பி, ராஜ்குமார்.என் ஆகியோர் மூன்றாவதாக தயாரிக்கும் சாதனைத் திரைப்படமான ‘டெவிலன்’ படத்தை அறிமுக இயக்குநர் பிக்கய் அருண் இயக்குகிறார்.
இதில் நாயகனாக ராஜ்குமார் நடிக்க, நாயகிகளாக கார்த்திகா, இந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஃபெடரிக், ஆனந்தி விஜயகுமார், குழந்தை நட்சத்திரம் டோர்த்தி எஸ்.ஜே, கிருதேவ்.கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கமல்ஜித் சிங் இசையமைக்கிறார். பிரவின்.எம் படத்தொகுப்பு செய்கிறார்.
ஒலி வடிவமைப்பாளராக கரண் மற்றும் ஷிபின் பணியாற்றுகிறார்கள். பெருதுளசி பழனிவேல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் அறிமுக விழா இன்று (மே 28) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது புதிய முயற்சி மற்றும் 48 மணி நேரத்தில் ஒரு படத்தை முழுமையாக முடித்து திரையிடும் சாத்தியக்கூறுகள் பற்றி பகிர்ந்து கொண்டார்கள்.
வசந்தகுமார் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில், “எங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்களை படக்குழு சார்பாக வருக வருக என வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சீகர் பிக்சர்ஸ், நண்பர் திரு ராஜ்குமார் ஏற்கனவே தூவல் மற்றும் எக்ஸ்ட்ரீம் என இரண்டு படங்களை தயாரித்திருக்கிறார்.
அந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதா? என்றால் இல்லை என்றே சொல்லலாம். எனவே அதில் திருப்தியடையாத தயாரிப்பாளர் ராஜ்குமார், திரைப்படத்துறையில் எதாவது சாதனை செய்ய வேண்டும் என்று யோசித்த போது தான், இயக்குநர் பிக்கய் அருண் அவர் முன்பு நிற்கிறார். அவர் உங்களை இத்துறையில் சாதனையாளராக மாற்றும் ஒரு படத்தை எடுக்கிறேன், என்று உத்வேகம் கொடுத்திருக்கிறார்.
அதனால் தான் ராஜ்குமாருக்கு மூன்றாவது படத்தை எடுக்கலாம் என்ற தைரியமும், நம்பிக்கையும் வந்தது. அப்படி சாதனை செய்யும் நோக்கில் அவர் மேற்கொண்ட தேடுதலில், 48 மணி நேரத்தில் இதுவரை யாரும் திரைப்படம் தயாரிக்கவில்லை, அதை நாம் செய்வோம், அதை நோபல் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற செய்யலாம், என்று சொல்லியிருக்கிறார்.
அதன்படி, நாளை 3 மணிக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதன்படி ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பு முடித்து விட்டு மறுநாள் எடிட்டிங், டப்பிங், கலரிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து, 31 ஆம் தேதி மாலை இதே திரையரங்கில் படத்தை திரையிட இருக்கிறோம். அதை பத்திரிகையாளர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த சந்திப்பு.
இத்தகைய சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள படக்குழுவை பத்திரிகையாளர்கள் வாழ்த்தி, ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.
கதாநாயகி கார்த்திகா பேசுகையில், “இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பே எனக்கு ஒரு பரிசு தான். காரணம், இன்று எனது பிறந்தநாள், இன்று இந்த நிகழ்வு நடப்பது என்னால் மறக்க முடியாது. நான் நிறைய சீரியல் பண்ணியிருக்கேன். ஆனால், 48 மணி நேரத்தில் எடுக்க கூடிய இப்படி ஒரு படத்தில் நடித்ததில்லை. இயக்குநர் அருண் சார் சொன்ன போது, நாம் முயற்சி பண்ணலாம் சார் என்று சொன்னேன்.
அவர் சப்போர்ட் பண்ணா கண்டிப்பாக பண்ணலாம் என்று சொன்னேன். தயாரிப்பாளர் ராஜ்குமார் சார் எனக்கு சப்போர்ட்டாக இருக்கிறார், என்னுடன் பணியாற்றுபவர்களும் சப்போர்ட்டாக இருக்கிறார்கள். நாளைக்கு தான் படப்பிடிப்பை தொடங்குகிறோம். பார்ப்போம், படம் வெற்றிகரமாக முடிவடைந்த பிறகு உங்களிடம் நிறைய பேசுகிறேன், நன்றி.” என்றார்.
இந்திரா பேசுகையில், “அருண் சார் மற்றும் தயாரிப்பாளருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு உலக சாதனைப் படம் நீங்கள் பணியாற்றுவீர்களா? என்று அருண் சார் என்னிடம் கேட்ட போது, ஓகே சொல்லிவிட்டேன். சாதிப்போமா என்பது கடவுளிடமும், உங்களிடமும் தான் இருக்கிறது. சாதிப்போம் என்று நம்புகிறோம். எங்கள் குழு மிக உறுதுணையாக இருக்கிறார்கள். நீங்களும் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், நன்றி” என்றார்.
நடிகர் ஃபெடரிக் பேசுகையில், “ஒரு கான்சப்ட் கொண்டு ஒருத்தர் இந்த அளவுக்கு இந்த மேடை வரை கொண்டு வர முடியும் என்றால், அவருக்கு தலை வணங்குகிறேன். அவர் சொன்ன கதை முழுவதும் வித்தியாசமாக இருந்தது. அது ரெகுலர் சப்ஜெக்ட் இல்லை. தைரியமாக அதன் மீது பணியாற்றி, எங்கள் குழு மீது நம்பிக்கை வைத்து சிறப்பாக செய்திருக்கிறார்.
இது மிகப்பெரிய சவால், ஆசிட் டெஸ்ட் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சவாலான விசயம். பல மாதங்களாக ஒரு படத்தை எடுக்கும் நிலையில், 48 மணி நேரத்தில் ஒரு திரைப்படம் என்ற புதிய டிரெண்டை அருண் செட் பண்ணுகிறார்.
இது ரிஸ்க்கான முயற்சி தான், ஆனால் நிச்சயம் இதில் அருண் மற்றும் ராஜ்குமார் இருவரும் வெற்றி பெறுவார்கள், அவர்கள் இதை வெற்றிகரமாக முடித்து சரித்திரத்தில் இடம் பிடிப்பார்கள்.” என்றார்.