அப்பா இயக்குனர், இட்லி வாங்க என்ன கஷ்டம்? - ட்ரோல் செய்தவர்களுக்கு தனுஷ் பதிலடி
தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லி கடை படம் வரும் அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.
ட்ரெய்லரை பார்த்த நெட்டிசன்கள் இது குக் வித் கோமாளி ஷோவின் நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் கதை போல் இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மாதம்பட்டி ரங்கராஜ் கதையா?
இந்நிலையில் இட்லி கடை ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய தனுஷிடம் பரிதாபங்கள் கோபி கேள்வி கேட்டார். 'கோயம்பத்தூர் பக்கம் ஒரு செஃப் இருக்காரு சார், அவரது கதையை தான் நீங்க படமா எடுக்குறீங்கனு சொல்றாங்க உண்மையா சார்' என அவர் கேட்டார்.
"இல்லை, அந்த மாதிரி இல்லை. இது என் சொந்த கற்பனை தான். என் கிராமத்தில் பார்த்த ஒருசில முக்கியமான கதாபாத்திரங்கள், என் மனதை பாதித்த கதாபாத்திரங்களை மையப்படுத்தி.. சொந்தமான கற்பனை கதை இது" என தனுஷ் விளக்கம் கூறி இருக்கிறார்.
ட்ரோல் செய்தவர்களுக்கு பதில்
இதற்கு முன் இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் தான் சின்ன வயதில் இட்லி வாங்க கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டதாக கூறி இருந்தார்.
'அப்பா இயக்குனர்.. இட்லி வாங்க கஷ்டமா?' என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதற்கும் தற்போது தனுஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.
"நான் பிறந்தது 1983ல.. அப்பா இயக்குனர் ஆனது 1991ல் தான். அந்த 8 வருஷம் கொஞ்சம் வறுமை தான். நான்கு பிள்ளைகள் என்பதால், இயக்குனர் ஆன பிறகும் கூட 1993 வரை அப்பாவுக்கு சிரமமாக தான் இருந்தது. 94/95ல் ஓகே."
"சின்ன வயதில் அதை சாப்பிடனும் இதை சாப்பிடணும் என அப்பா, அப்பா, பாட்டி என யாரிடம் சென்று காசு கேட்டாலும் உடனே கொடுத்துட மாட்டாங்க."
"நாங்க வீட்டு கஷ்டத்தை புரிந்துகொண்ட குழந்தைகள் தான். அதனால் வயலில் வேலை செய்து, பூ பறித்து, அதற்கான கூலியை எடுத்துக்கொண்டு போய் இட்லி வாங்கி சாப்பிடுவோம்" என தனுஷ் கூறி இருக்கிறார்.