கவர்னர்: திரை விமர்சனம்
மனோஜ் பாஜ்பாயி, அடா ஷர்மா, மதுபாலா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள கவர்னர் இந்தி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம் வாங்க.

கதைக்களம்
1990யில் ஈராக் போர் தாக்கத்தினால் இந்தியாவில் கடுமையான எண்ணெய் தட்டுப்பாடு நிலவுகிறது. அதன் எதிரொலியாக பொருளாதார நிலையும் மந்தமாக, இந்த நிலை நீடித்தால் கடுமையான வீழ்ச்சியை நாடு சந்திக்கும் என அரசு பயப்படுகிறது.
அதாவது ஒரு மாதத்தில் இந்தியாவே திவால் ஆகப்போகும் சூழலில், ரமணன் (மனோஜ் பாஜ்பாயி) RBI-யின் கவர்னர் ஆக நியமிக்கப்படுகிறார். அவர் கூறும் யோசனைகள் சாத்தியமில்லை என்று சக ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால், ரமணனோ இப்படித்தான் செய்தாக வேண்டும் என்றும் வாதிடுகிறார். உதாரணமாக சோவியத் யூனியனை தவிர்த்து அமெரிக்காவிடம் நாம் உதவி கோரலாம் என்று ரமணன் கூறுகிறார்.

அவர்களிடம் நாம் கடனுதவி பெறுவதற்கு கைமாறாக, பாம்பாயில் அவர்களின் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப ஏற்பாடு செய்யலாம்; அதை இரகசியமாக செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார் அவர்.
அதற்கு பிரதமர், நிதியமைச்சர் ஆகியோரும் ஒப்புதல் அளிக்க அந்தப் பணி தொடங்கப்படுகிறது. இந்த விஷயம் பத்திரிகையாளராக இருக்கும் அதிதி வெர்மாவுக்கு (அடா ஷர்மா) தெரிய வர, எரிபொருள் நிரப்புவதை புகைப்படம் எடுத்து செய்தியாக வெளியிட்டு விடுகிறார்.

நாங்கள் வீட்டில் எண்ணெய் இல்லாத இருக்க, அரசு அமெரிக்காவுக்கு இரகசியமாக பெட்ரோல் தருகிறதா என மக்கள் கொந்தளிக்கின்றனர். அந்த சூழலை ஒருவழியாக சமாளிக்கும் ரமணனுக்கு, அடுத்ததாக ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதையெல்லாம் சமாளித்து அவர் எப்படி இந்திய பொருளாதாரம் திவால் ஆவதில் இருந்து காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
மனோஜ் பாஜ்பாயியை வைத்து இன்ஸ்பெக்டர் ஜெண்டே என்ற திரைப்படத்தை கொடுத்த இயக்குநர் சின்மே டி.மன்ட்லேகர் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். 1990-91யில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
1990 காலக்கட்டத்தை கண்முன் நிறுத்தும் வகையில் மிகவும் நேர்த்தியாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கவர்னர் ரமணன் கதாபாத்திரத்திற்கு மனோஜ் பாய்பாயி உயிர் கொடுத்துள்ளார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு மிகவும் சிறப்பாக கவர்னர் கதாபத்திரத்தை அவர் செய்துள்ளார்.

மிடுக்கான தோற்றத்தில் இருந்தாலும் எங்கும் அதிர்ந்து பேசாமல், கோபப்படாமல் காரியங்களை சாதித்துக் காட்டுகிறார். அவர் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகளை விட, அதனை அவர் செய்து முடிக்கும்போது மிரள வைக்கின்றன. RBI-யில் CR பொறுப்பில் இருக்கும் நௌஷத் மொஹம்மது, ஆரம்பத்தில் மனோஜ் பாஜ்பாயிக்கு எதிரான மனநிலை உள்ளார்.
ஒரு கட்டத்தில் அவரது புத்திக்கூர்மையை தெரிந்துகொள்ளும் அவர், சோர்ந்துபோகும் மனோஜ் பாய்பாயிக்கு உத்வேகம் அளித்து வேலை பார்க்க சொல்கிறார். அந்த கதாபத்திரம் சில இடங்களில் அதிக கைத்தட்டல்களை பெறுகிறது. குறிப்பாக, அமைச்சரிடம் ஒரு வேலைக்கு ஒப்புதல் வாங்க செல்லும் இடத்தில் அவர் பேசும் மற்றும் செய்யும் விஷயங்கள் செம ரகம்.

முதல் பாதி கொஞ்சம் பொறுமையாக வேகமெடுக்க, இரண்டாம் பாதி பர பரவென செல்கிறது. தங்கத்தை கொண்டுசெல்லும் காட்சிகள் எல்லாம் கூஸ்பம்ப் மொமெண்ட். காட்சிகளைத் தாண்டி வசனங்கள் பல இடங்களில் கைத்தட்டல்களை பெறுகிறது.
படம் முழுக்க விறுவிறுப்பாக செல்ல மனன் ஷாவின் பின்னணி இசையும், அமித் திரிவேதியின் உறுத்தல் இல்லாத பாடல்களும் உதவியிருக்கின்றன. விஷால் சின்ஹாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி; மேக்னா மஞ்சந்தா, சஞ்சய் சர்மாவின் படத்தொகுப்பு கச்சிதம். சுவேந்து பட்டாசார்ஜீ, சௌரப் பாரத், ரவி அஸ்ராணி மற்றும் விபுல் அம்ருத்லால் ஷா ஆகியோர் இணைந்து சிறப்பாக கதை, திரைக்கதை அமைத்துள்ளனர்.

க்ளாப்ஸ்
கதைக்களம்
திரைக்கதை
வசனங்கள்
நடிகர்கள் தேர்வு மற்றும் நடிப்பு
பின்னணி இசை
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் இந்த கவர்னர் இந்தியாவை காப்பாற்றியது மட்டுமல்லாமல், பார்வையாளர்களையும் திரும்பி (ப) பார்க்க வைக்கிறார். கண்டிப்பாக திரையரங்கில் பார்க்கக்கூடிய படம்.
