Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
இந்தியில் சுமார் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 100 கோடி ரூபாயைத் தாண்டி வசூலில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ஹனுமன் அன்ஷ் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
ராம் நந்தன் போஸாலே என்ற புரட்சியாளர், தனது பசியைப் போக்கி காவலர்களிடம் இருந்து காப்பாற்றிய நீம் கரோலி பாபாவின் வாழ்க்கையின் தொடக்கம் குறித்து பேசுகிறார். 1905-ஆம் ஆண்டில் பிராஜில் வசிக்கும் லக்ஷ்மி நாராயணன் என்ற சிறுவனின் அம்மா இறந்துவிடுகிறார்.
அவர் கடவுளிடம் சென்றுவிட்டார் என்று உறவினர்கள் கூற, நானும் கடவுள் ராமரிடம் செல்கிறேன் என்கிறான் லக்ஷ்மி நாராயணன். இந்த சமயத்தில் அவனது அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள, அது சுத்தமாக பிடிக்காத லக்ஷ்மி நாராயணன் வீட்டைவிட்டு வெளியேறி ஹனுமனின் பக்தனாக துறவறம் மேற்கொள்கிறான்.

ஒவ்வொரு ஊராக துறவிகளுடன் இணைந்து கடவுளை துதிக்கும் லக்ஷ்மி நாராயணன், ராஜ்கோட்டில் உள்ள ஒரு வைஷ்ணவக் கோயிலை அடைகிறான். அங்கு வயதான அர்ச்சகர் சந்திக்கும் சிறுவன், அந்த கோயில் பல ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றியதாக மரம் தன்னிடம் கூறியது என்று கூறுகிறான்.
அதைக் கேட்டு வியக்கும் முதியவர் அவனை சோதித்துப் பார்க்க முடிவு செய்கிறார். ஆனால், சிறுவன் லக்ஷ்மி நாராயணன் அமைதியாக அங்கிருந்து வெளியேறி விடுகிறான். பின்னர் ஒரு ஊரில் கடவுள் வழிபாடு முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவதை காண்கிறான். ஆனால், அங்கு சில சிறுவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதை காணும் லக்ஷ்மி நாராயணன், தனக்கு வழங்கப்பட்ட ஒரு கையளவு பிரசாதத்தை அவர்களுக்கு கொடுக்க அங்கு நிகழும் அற்புதத்தை பூசாரி கண்டு ஆச்சரியப்படுகிறார்.

உடனே அந்த சிறுவர்களையும் சரிசமமாக நடத்தி, இலை போட்டு பந்தி பரிமாறி, லக்ஷ்மி நாராயணனை கடவுளின் அவதாரமாக வணங்குகிறார் அந்த பூசாரி. இவ்வாறாக சிறுவன் லக்ஷ்மி நாராயணன் சில அற்புதங்களை நிகழ்த்தி லக்ஷ்மிதாஸ் ஆகி, பின் எப்படி நீம் கரோலி பாபாவாக உருமாறினார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
உத்தர்பிரதேசத்தில் லக்ஷ்மி நாராயணனாக பிறந்து நீம் கரோலி பாபாவாக வாழ்ந்து மறைந்தவரின் வரலாற்றை, டாக்டர்.விஷால் சதுர்வேதி திரைப்படமாக இயக்கியுள்ளார். நீம் கரோலி பாபா சிறுவயது முதல் பெரியவராக வளர்ந்து வரையிலான காட்சிகளை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
பொதுவாக, ஆன்மிகம் சார்ந்த படங்கள் என்றாலே கிராஃபிக்ஸை பயன்படுத்தி எதார்த்தத்தை மீறிய காட்சிகளாக எடுப்பார்கள். ஆனால், இந்த திரைப்படத்தில் அப்படி இல்லாமல் மருந்துக்கு மட்டுமே கிராஃபிக்ஸை ஒரே ஒரு காட்சி பயன்படுத்தி, மற்ற காட்சிகளை மிகவும் எதார்த்தமாக காட்டியதால் படத்துடன் எளிதாக ஒன்ற முடிகிறது.

அன்பு, தீங்கு செய்யாமை, உதவி செய்தல் போன்றவற்றை வசனங்களாக போதனை செய்யாமல், போகிற போக்கில் ரசிக்கும் வகையில் காட்டியவிதம் மிகச்சிறப்பு. இளம் வயது பாபாவாக நடித்திருக்கும் விஹான் ஷெட்கே நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல்மொழி என அட்டகாசமான நடிப்பை தந்திருக்கிறார்.
விஹானின் நடிப்பைப் பார்க்கும்போது இன்னும் கூட இளம் வயது பாபாவின் காட்சிகளை நீட்டியிருக்கலாமே என்று கேட்க தோன்றும். நடிகர் ஷோபினாவ் சத்யா, நீம் கரோலி பாபாவாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே கூறலாம். அந்தளவிற்கு ஒரு பாபாவின் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார்.

ரயிலில் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக இறங்கிவிட்டதும் அவர் கோபத்தை கட்டுப்படுத்தி சிரிக்கும் காட்சி மிரட்டல். சாந்தமான முகத்தை வைத்துக்கொண்டு அவர் பேசும் வசனங்கள் பிரமாதம். படத்தில் வரும் பிற கதாபாத்திரங்களும் கச்சிதமாக நடித்துள்ளனர். காட்சிக்கு காட்சி எங்கும் தொய்வில்லாமல் ரசிக்கும்படியாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் விஷால் சதுர்வேதி.
படத்திற்கு மற்றொரு பலம் சாது சுஷில் திவாரியின் பாடல்களும், பின்னணி இசையும். விஷால் பாவாவின் ஒளிப்பதிவு அருமை. சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவை காட்டிய விதம் சிறப்பு. இரண்டரை மணிநேரம் திரைப்படத்தை நேர்த்தியாக கொடுத்துள்ளார் படத்தொகுப்பாளர் ஷான்க் ராஜாத்யாக்ஷா.
க்ளாப்ஸ்
ஷோபினாவ் சத்யா, விஹான் ஷெட்கே
தொய்வில்லாத திரைக்கதை
காட்சியமைப்புகள்
பாடல்கள், பின்னணி இசை
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் நல்ல கருத்துக்களை கூறியிருக்கும் இந்த Hanuman Ansh திரைப்படத்தை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
