நியாயத்திற்காக போராடிய வக்கீல் சந்துரு.. ஜெய்பீம், ரியல் ஹீரோ..
ஜெய்பீம் படம் நம் அனைவரின் மனதிலும் நீங்காத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பழங்குடியினர் இருளர் சமூகத்திற்கு எதிராக நடக்கும் பல விஷயங்களை கண்டித்து, சூர்யா [சந்துரு] கேட்ட ஒவ்வொரு கேள்விகளும் ஆழமானது, அழுத்தமானது. இது படத்தில் மட்டும் கேட்கப்பட்ட கேள்வி அல்ல. நிஜத்திலும் கேட்கப்பட்ட ஒன்று தான். படத்தில் நம் கண்முன் வக்கீல் சந்துருவாக, நடிகர் சூர்யா தெரிந்தார். ஆனால், நிஜத்தால் யார் இந்த வக்கீல் சந்துரு என்று, நம்மில் பலருக்கும் தெரியாது, அவர் யார் என்று. தற்போது தெரிந்துகொள்வோம்.
யார் இந்த சந்துரு :
சிறீரங்கம் என்னும் ஊரில் பிறந்தார் சந்துரு. தனது கல்வியை சென்னையில் உள்ள பள்ளியிலும், கல்லூரியிலும் கற்றுக்கொண்டார். 25-12-1968 அன்று வெண்மணி என்னும் சிற்றூரில் நடந்த 44 தாழ்த்தப்பட்ட மக்களை தீயிட்டு கொளுத்திய நிகழ்ச்சியைக் கண்டித்து விவசாய தொழிலாளர்களின் ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்.
இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார். அப்போது சென்னையில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பான போராட்டங்களில் கலந்து கொண்டார்.
சட்டக் கல்வியை படித்து முடித்து, 1976-ல் வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார். 1997ல் சீனியர் வழக்கறிஞர் ஆனார். பல, பொது நல வழக்குகள், மனித உரிமை வழக்குகள், பெண்கள் உரிமை வழக்குகள் ஆகியவற்றில் சம்பளமாக ரூ.1 கூட வாங்காமல் வாதாடினார்.
சந்துருவின் ஜெய் பீம் :
1993ஆம் ஆண்டில் கடலூரின் முதனை கிராமத்தில் நிகழ்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கிற்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு 2006ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் மிரட்டல்களையும் அதிகாரங்களையும் கடந்து அந்த வழக்கில் ராஜாக்கண்ணுவின் குடும்பத்திற்கு தனது நியாமான வாதங்கள் மூலம் நீதியை பெற்று தந்தார் சந்துரு.
30 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, 2001, 2004ஆம் ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டும், 2006ஆம் ஆண்டு தான், சந்துரு நியமிக்கப்பட்டார்.
இது குறித்து பேசிய சந்துரு : ' இவர் தீவிரவாதிகளுக்கான வக்கீல் என்று சொல்லி, அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எனக்கு போஸ்டிங் போட மறுத்துவிட்டார். வழக்கறிஞர் என்பது தொழில். யாருக்காகவும் யாரும் வாதாடலாம். இதை காரணம் காட்டி நீதிபதி பொறுப்பை கொடுக்காமல் இருக்க முடியாது ' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவுடன் அவர் முதலில் செய்த காரியம், தன் சொத்து விவரங்களை தலைமை நீதிபதியிடம் ஒரு சீலிட்ட கவரில் சமர்ப்பித்தது தானாம். தற்போது பல லட்ச கணக்கில் தமிழகத்தில் பெண்டிங் கேஸ்கள் இருக்கும் நிலையில், தான் நீதிபதியாக பணிபுரிந்த காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்தியாவிலேயே இவ்வளவு வழக்குகளுக்கு எந்த நீதிபதியும் தீர்ப்பு வழங்கியதில்லையாம்.
உயர் நீதிமன்றத்தின் சம்பிரதாயங்களையும், ஆடம்பர விஷயங்களையும் தூக்கி எறிந்தவர் சந்துரு. தனது பாதுகாப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் மட்டுமல்ல, ஒரு கான்ஸ்டபிள் கூட வேண்டாம் என மறுத்துவிட்டார். நீதிமன்றத்தில் தன்னை 'மை லார்ட்' என அழைக்கக்கூடாது என வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டார்.
அதே போல், மேடை நாடங்களுக்கு, போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற தேவையில்லை, பஞ்சமி நிலங்களை, வேறு யாருக்கும் ஒதுக்கக் கூடாது, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில், இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும், கோவில்களில், பெண்கள் பூஜை செய்வதற்கு எந்த தடையும் இல்லை, மாட்டிறைச்சி கடைகள் நடத்த தடை இருந்ததை நீக்கி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
8-3-2014ல் ஒய்வு பெற்றார். வழக்கமாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும்போது 5 நட்சத்திர ஓட்டல்களில் நிகழும் பணி ஓய்வு பாராட்டு விழாவை வேண்டாம் என மறுத்து தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார் சந்துரு. ஓய்வுக்கு பின்னர் நீதித்துறை சம்பந்தமான பொறுப்புக்களை பெற மாட்டேன் என மறுத்துவிட்டார்.
அதற்கு பதிலாக சமுதாய பணி செய்வதையே விரும்புவதாக தெரிவித்தார். பணி ஓய்வு பெறும்போதும், தன் சொத்து கணக்கு விவரங்களை அறிக்கையாக அளித்தார். அப்போது, பதவி ஏற்கும்போது என் குடும்ப சொத்து விவரங்களை கொடுத்தேன். இப்போது என்னுடைய சொத்து விவரங்களை கொடுக்கிறேன். புதிதாக சொத்து வாங்கியதற்கான வருமான விவரங்களையும் குறிப்பிட்டுள்ளேன் என்றார்.
பணி ஓய்வு பெறும் நாளில் தனக்கு வழங்கப்பட்ட சொகுசு காரை கூட அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்றார். இப்படி தனது வாழ்நாள் முழுவதும் சட்டத்திற்கு உட்பட்டு வாழ்ந்த இம்மனிதரின் வாழக்கையை ஒவ்வொருவரும் தேறிக்கொள்ளவேண்டும். அனைவரும் மனிதர்கள் தான். சட்டம் உட்பட இவ்வுலகில் அனைவரும், அனைத்தும் சமம் என்று சொல்லும், ஜெய் பீம் படத்தை மிஸ் செய்து வீடாதீர்கள்.
" ஜெய்பீம் என்றால் ஒளி..
ஜெய்பீம் என்றால் அன்பு..
ஜெய்பீம் என்றால் இருளிலிருந்து
வெளிச்சத்தை நோக்கிய பயணம்..
ஜெய்பீம் என்றால் பலகோடி
மக்களின் கண்ணீர் துளி.. "
சாதிதான் சமூகம் என்றால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும் - 'சட்ட மேதை' அம்பேத்கர்