குபேரா திரைவிமர்சனம்
குபேரா திரைவிமர்சனம் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் குபேரா.
தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள குபேரா படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
பல லட்சம் கோடி மதிப்பிலான எண்ணெய் மற்றும் எரிவாயு ஒப்பந்ததை கைப்பற்ற நினைக்கிறார் global நிறுவனத்தை நடத்திவரும் தொழிலதிபர் நீரஜ். இந்த ஒப்பந்தம் வேண்டும் என்றால் ரூ. 1 லட்சம் கோடி தனக்கு தர வேண்டும் என மந்திரி கூற அதற்கு ஏற்பாடு செய்கிறார்.
ஆனால், இதில் தனது நிறுவனமோ, அல்லது தனது பெயரை அடிபடக்கூடாது என்பதால் நாகர்ஜுனா மூலம் அதை செய்ய திட்டமிடுகிறார் நீரஜ். அரசாங்கத்தில் நேர்மையான வருமான வரித்துறை அதிகாரியாக இருந்த நாகார்ஜுனா, தான் செய்யாத தவறுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். 7 ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்படுகிறது.
தான் நம்பிய அரசாங்கம் தனக்கு கைகொடுக்கவில்லை என்பதால், இனி நேர்மையான பாதையில் பயணிக்க வேண்டாம் என நீரஜ் உடன் இணைகிறார் நாகர்ஜுனா. ரூ. 1 லட்சம் கோடியில் ரூ. 50 ஆயிரம் கோடி கருப்பு பணமாகவும், மீதமுள்ளதை வெள்ளை பணமாகவும் தரவேண்டும்.
இதில் நீரஜ் நிறுவனம் சம்பந்தம் ஆகக்கூடாது என்பதால், பினாமி மூலம் இதை செய்ய முடிவு எடுக்கும் நாகர்ஜுனா, வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து நான்கு பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுக்கிறார். அவர்கள் பெயரை புதிய நிறுவனங்களை தொடங்கி, ஒவ்வொரு நபரின் பெயர் மூலம் ரூ. 10 ஆயிரம் கோடி பரிவர்த்தனை நடக்கிறது. ஆனால், பணம் கைமாறிய பின் அந்த பிச்சைக்காரர்களை கொன்றுவிடுகிறார்கள்.
இப்படியிருக்க ஒரு கட்டத்தில் இது தனுஷுக்கு தெரியவருகிறது. இதன்பின் அந்த இடத்தில் இருந்து தனுஷ் தப்பி செல்ல, அவர் பெயரில் உள்ள கணக்கில் ரூ. 10 ஆயிரம் கோடி உள்ளது. அதை தனுஷ் இல்லை செய்ய முடியாது என்பதால், ஊர் முழுவதும் சல்லடை போட்டு தனுஷை தேடுகிறார்கள். இந்த சமயத்தில்தான் ராஷ்மிகாவை சந்திக்கிறார் தனுஷ். இதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
தேவா என்கிற கதாபாத்திரத்தில் இப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார். ஹீரோவாக தனுஷ் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பதை மறந்து, நாம் முழுமையாக தேவாவுடன் பயணிக்க செய்துவிடுவோம். அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் தனுஷ்.
கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் இறுதியாக ஒரு படம் அமைந்துள்ளது என்றால் அது குபேராதான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பின் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் என்ட்ரி கொடுத்தாலும், தனக்கு கிடைத்த ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்துள்ளார். அதற்கு பாராட்டுக்கள்.
படத்தின் ஆரம்பத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை தனுஷுக்கு இணையாக இப்படத்தை தனது தோளில் சுமந்து செல்கிறார் நாகர்ஜுனா. நேர்மைக்கும் - அநீதிக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் தவிப்பை தனது நடிப்பில் காட்டிய விதம் நன்றாக இருந்தது. அதே போல் வில்லனாக நடித்த ஜிம் சர்ப் நடிப்பும் ரசிக்கும் படியாக இருந்தது.
இயக்குநர் சேகர் கம்முலா எடுத்துக்கொண்ட கதைக்களம் சிறப்பு. அதை அனைவருக்கும் பிடிக்கும் படி திரையில் வழங்கிய விதமும் அருமையாக இருந்தது. ஆனால், படத்தின் நீளம் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக முதல் பாதி திரைக்கதை மெதுவாக செல்கிறது.
எடிட்டிங் இப்படத்தை காப்பாற்றியுள்ளது என்று பார்த்தாலும், ஒரு சில இடங்களில் எடிட்டிங் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்றால், அது இறுதி 40 நிமிடங்கள்தான். வில்லனை வைத்து தனுஷ் ஆடிய ஆட்டம் வேற லெவல். அதிலும் வில்லனை பிச்சை எடுக்க வைத்த விதம் திரையரங்கில் கைதட்டல்களை சொந்தமாக்கியது.
பணக்காரன், அதிகாரத்தில் உள்ளவனுக்கு மட்டுமே இந்த உலகம் சொந்தமல்ல, யாசகம் கேட்பவர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கு இந்த உலகம் சொந்தம்தான் என திரைக்கதையில் காட்டிய விதம் அருமை. ஆனால், கிளைமாக்ஸ் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
தேவி ஸ்ரீ பிரசாந்தின் பாடல்கள் படத்தோடு ஒன்றிப் போகிறது. ரசிக்கும் படியாக இருந்தன. பின்னணி இசை பல இடங்களில் நன்றாக இருந்தது. ஆனால் ஒருசில இடங்களில் இந்த காட்சிக்கு இப்படி ஒரு பின்னணி இசையா என யோசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.
பிளஸ் பாயிண்ட்
தனுஷ், ராஷ்மிகா, நாகர்ஜுனா மற்றும் ஜிம் சர்ப் நடிப்பு.
இரண்டாம் பாதி, குறிப்பாக படத்தின் கடைசி 40 நிமிடங்கள்.
எடிட்டிங்
மைனஸ் பாயிண்ட்
படத்தின் நீளம், குறிப்பாக சலிப்பை ஏற்படுத்தும் முதல் பாதி