மஹாவதார் நரசிம்மா: திரை விமர்சனம்
ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வின் குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள "மஹாவதார் நரசிம்மா" அனிமேஷன் புராணத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போமா.
கதைக்களம்
அசுரர்களான ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் சகோதரர்கள் விஷ்ணு பெருமானை வழிபடுபவர்களை அடித்து உதைத்து துன்புறுத்துகின்றனர். நேரில் வராத ஒருவரை கடவுள் என்பதா? அந்த விஷ்ணுவை கண்டுபிடித்து அழிப்பேன் என சபதமெடுக்கிறார் ஹிரண்யாக்ஷன்.
தன் அண்ணனிடம் ஆசிபெறும் அவர் பூமாதேவியை சிறைபிடித்து கடலுக்கு அடியில் ஒளித்து வைக்கிறார். இதனால் பிரம்மதேவனிடம் தேவர்கள் மன்றாட வராக அவதாரத்தில் தோன்றும் விஷ்ணு, ஹிரண்யாக்ஷனுடன் சண்டையிட்டு அவரை கொன்று பூமாதேவியை மீட்கிறார்.
தம்பியை பறிகொடுத்த ஹிரண்யகசிபு தானே மூவுலகையும் ஆளும் கடவுள் என மாற பிரம்மனை நோக்கி கடும் தவம் இருக்கிறார். அதன் பலனாக எந்த மனிதனாலும், உயிராலும், ஆயுதத்தாலும் தன்னை கொல்ல முடியாத வரத்தை பெறுகிறார். பின்னர் மூவுலகையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்கிறார்.
ஆனால் அவருக்கு பிறக்கும் மகன் பிரகலாதன், எந்நேரமும் விஷ்ணுவின் துதி பாடுகிறார். அசுர குலத்தைச் சேர்ந்த சிறுவன் பிரகலாதன் விஷ்ணுவை நேரில் பார்த்தாரா? ஹிரண்யகசிபுவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு எப்படி வந்தது என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
பக்த பிரகலாதா புராணக்கதையைத்தான் இந்தியில் அனிமேஷன் வடிவில் இயக்கியிருக்கிறார் அஷ்வின் குமார். டெக்னிக்கலாக படம் காட்சி காட்சி கண்களுக்கு விருந்துதான். அந்த அளவிற்கு நேர்த்தியாக அனிமேஷனை கொடுத்திருக்கிறார்.
இந்தி படமாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்து 2D, 3D படமாக வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் வசனங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. அதேபோல் பாடல்களில் வரும் வரிகளும் ரசிக்கும்படியாக உள்ளன.
படம் முழுக்க பின்னணி இசையில் ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் சாம்.சி.எஸ். குறிப்பாக கிளைமேக்சில் பின்னணி இசை மிரட்டல். 90'ஸ் கிட்ஸை பொறுத்தவரை சிறுவயதில் பார்த்த பக்த பிரகலாதா படம் நினைவுக்கு வரும் என்பது நாஸ்டாலஜிக் மொமெண்ட் ஆக இருக்கும்.
எங்கும் தொய்வில்லாத திரைக்கதை நம்மை திரையை விட்டு விலக விடாமல் பார்த்துக்கொள்கிறது. பிரகலாதனை கொல்ல எடுக்கும் முயற்சிகளில் அவர் தப்பிப்பது எல்லாம் ட்விஸ்ட் மொமெண்ட்ஸ்தான்.
இந்த சிறுவனை எப்படி கொல்வது என்று மலை உச்சியில் இருவர் சொல்லும் இடம் செம எமோஷனல் டச். அடுத்து "மஹாவதார் பரசுராம்" படம் வரப்போவதை முடிவில் அறிவித்திருக்கிறார்கள்.
க்ளாப்ஸ்
அனிமேஷன்
இசை
வசனங்கள்
திரைக்கதை
பல்ப்ஸ்
அசுரர்களை உருவத்தில் காட்ட கொடூரமாக பற்களை வைத்தது உறுத்தல்
கிளைமேக்ஸ் வன்முறை
மொத்தத்தில் நல்ல ஒரு புராண படத்தை அனிமேஷன் வடிவில் ரசிக்க கண்டிப்பாக இந்த "மஹாவதார் நரசிம்மா"வை தரிசிக்கலாம்.