வரும் டிசம்பர் 13 முதல் ‘பேரன்பு’ மற்றும் ‘தெய்வம் தந்த பூவே’ ஆகிய இரண்டு புத்தம்புதிய நெடுந்தொடர்கள் அறிமுகம்
சென்னை: டிசம்பர் 13 முதல் இரண்டு சுவாரஸ்யமான குடும்பத் தொடர்களை ஒளிபரப்ப துவங்குவதை அறிவிப்பதில் ஜீ தமிழ் பெருமகிழ்ச்சியடைகிறது. ‘பேரன்பு’ மற்றும் ‘தெய்வம் தந்த பூவே’ ஆகிய தொடர்களின் மூலம், சமுதாயத்தின் விதிமுறைகளால் சூழப்பட்ட மனித உணர்வுகளின் ஆழங்களுக்கு நம்மை இட்டுச்செல்லும் இரண்டு புரட்சிகரமான கதைகளுடன், ஜீ தமிழ் ஒரு புதிய உச்சத்தினை எட்ட தயாராகியுள்ளது. வழக்கமான பிற்போக்கு சிந்தனையை தகர்க்கும் இரண்டு கதாநாயகிகளின் வலுவான கதைகளுடன் வரும் இத்தொடர்கள் – நேயர்கள் தங்கள் மருமகள்களுடனான குடும்ப பந்தங்களைப் புதுப்பிக்கும் உத்வேகத்தை அளிக்கும்.
மாமியாரின் இடத்தில் ஒரு தாயைப் பெறும் பெண்கள் அனைவரும் பாக்கியசாலிகள், என்கிற நம்பிக்கைக்கு உயிரூட்டும் விதமாக ஜீ தமிழ், புதிய தொடர்களை வழங்கவுள்ளது. தலைப்பிலேயே அன்பைத் தாங்கி வரும் ‘பேரன்பு’, வழக்கத்திற்கு மாறான மாமியார்-மருமகள் உறவினைக் காட்டும் அன்பான ஒரு இனிய குடும்பத் தொடராகும். இதில் பழம்பெரும் நடிகை ஷமிதா ஸ்ரீகுமார் மற்றும் வைஷ்ணவி அருள்மொழி ஆகியோர் முறையே மாமியார், மருமகள் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பிரபல கட்டிடக்கலை வல்லுநரான கார்த்திக்குடன், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒரு திருமண உறவினை துவங்கும் - கடவுள் நம்பிக்கையும், நல்ல மனதும் கொண்ட பெண்ணான வானதியின் வாழ்க்கையே இத்தொடரின் கதைக்களமாகும். கார்த்திக் கதாபாத்திரத்தில் விஜய் வெங்கடேசன் நடிக்கிறார். இருப்பினும், குணாதிசயங்களில் உள்ள வேறுபாடுகளின் காரணமாகத் தம்பதிகள் இருவருக்கும் இடையில் ஒரு அசவுகரியம் நிலவுவதை உணர்கிறார், மாமியார் ராஜ ராஜேஸ்வரி.
மணமகன் இல்லத் தலைவியான அவர், வானதியின் மீது தன் மகனுக்குக் காதலை உணரவைக்கும் பொறுப்பினை ஏற்கிறார். இத்தொடரானது, வருகின்ற டிசம்பர் 13 முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. டிசம்பர் 13 முதல் மதியம் 2:30 மணிக்கு மற்றொரு தொடரான ‘தெய்வம் தந்த பூவே’ ஒளிபரப்பாகும். வாழ்வில் தடைகளைக் கடந்து தைரியமாக உலகினை எதிர்கொள்ளும், தளராத மனமுடைய சிங்கப்பெண்ணான மித்ராவின் கதையை இத்தொடர் நேயர்களுக்குக் கூறவுள்ளது. எதிர்பாராமல் வினயை சந்திக்கும் மித்ரா, விதிவசத்தால் திசைமாறிய அவனது வாழ்க்கையைத் தனது நெறிகளால் மாற்றுகிறாள்.
‘நல்ல மனிதர்களே வாழ்வில் அதிக சோதனைகளுக்கு ஆளாவார்கள்’ என்பதற்கு ஏற்ப மித்ராவும் தனது கடந்த காலத்தில் ஒரு கஷ்டத்தினைக் கடந்தே வந்திருக்கிறாள், ஆனால் அந்த மோசமான காலத்தின் தாக்கம் இப்போதும் அவளைத் தொடர்கிறது. அவள் தனது இக்கட்டான சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கிறாள் என்பதே கதையின் போக்கினை நிர்ணயிக்கிறது. தனது நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை மேம்படுத்தும் இலட்சியத்துடன், தைரியமும், அன்பும் நிறைந்த பெண்ணான மித்ரா கதாபாத்திரத்தில் நிமிஷா செங்கப்பா நடிக்கிறார்.
மேலும், ஒரு நேர்மையான பணக்கார ஆணான வினய் கதாபாத்திரத்தில் அம்ருத் கலாம் நடிக்க, பழம்பெரும் நடிகர் பாம்பே ஸ்ரீதரன் – டாக்டர் ராமகிருஷ்ணனாக நடிக்கிறார். இத்தொடர்களின் அறிமுகம் குறித்துப் பேசிய ஜீல் (ZEEL) நிறுவனத்தின், ஈ.வி.பி. மற்றும் தென் பிரிவின் தலைவர், திரு.சிஜூ பிரபாகரன் அவர்கள் பேசுகையில், “எப்போதும் மாறிக்கொண்டே வரும் இன்றைய காலத்தில், அதற்கேற்ப மாறிவரும் உறவுகளைப் பற்றியும் பேசவேண்டும் என்கிற பொறுப்புடன், ஜீ தமிழ் உறவுகளை புதிய கோணத்தில் அணுகும் இந்த புத்தம்புதிய தொடர்களைத் துவங்கியுள்ளது.
இவற்றின் மூலம், பெண்கள் எப்படி ஒருவரை ஒருவர் மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் இக்கதைகள் முன்வைக்கும். ஒரு தொலைக்காட்சி சேனலாக நாங்கள் எங்களது நேயர்களுக்கு பொழுதுபோக்கினை மட்டும் வழங்காமல், நேயர்கள் தங்கள் வாழ்க்கையோடு பொருத்திப்பார்த்து, அதிலிருந்து ஊக்கத்தினை பெற்றுக்கொள்ளும் வகையிலான அர்த்தமுள்ள கதைகளையும் வழங்குவதே எங்களது தேடலாகும். இதனை மனதில் கொண்டு, ஒரு மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையிலான உறவில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்தக்காட்டும் நோக்குடன், பேரன்பு தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் முன்பு நிகழ்ந்த ஒரு கசப்பான அனுபவத்தினைக் கடந்து, கடுமையான சவால்களைத் தைரியமாக எதிர்கொள்ளும் நம்பிக்கையளிக்கும் கதையாக ‘தெய்வம் தந்த பூவே’ உருவாகியுள்ளது. இன்று இந்த இரண்டு தொடர்களைத் துவங்கிவைக்கும் இத்தருணத்தில், எங்களது நேயர்கள் இதுபோன்ற புதிய பாதையை நோக்கி நடைபோடும் கதைகளை இனிவரும் ஆண்டுகளிலும் ஊக்குவிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று தெரிவித்தார். டிசம்பர் 13 முதல் சுவாரஸ்யமான பேரன்பு மற்றும் தெய்வம் தந்த பூவே தொடர்களை ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் Zee5 ஓடிடி தளத்திலும் கண்டு மகிழுங்கள்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
