ஆஃபிஸர் ஆன் டியூட்டி திரை விமர்சனம்
குஞ்சாகோ போபன், பிரியாமணி நடிப்பில் வெளியாகியுள்ள "ஆஃபிஸர் ஆன் டியூட்டி" மலையாளப் படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
குஞ்சாகோ போபன் CI அதிகாரியாக மீண்டும் பணியில் சேருகிறார். அவர் காவல் நிலையத்தில் நுழைந்த முதல் நாளே நகை திருட்டு வழக்கு ஒன்று வருகிறது.
அதனை அவர் விசாரிக்க தொடங்கும்போது ஜெகதீஷின் மகள், தனது அப்பாவுக்கு தெரியாமல் போலி நகையை அவரிடம் கொடுத்ததை குஞ்சாகோ போபன் அறிகிறார்.
அதன் பின்னர் அசல் நகை குறித்து தெரிந்து அடகு கடையில் சோதிக்கும்போது, ஜெகதீஷின் மகள் அடகு வைத்த நகையுடன் மேலும் இரண்டு நகைகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வருகிறது. இந்த விசாரணை நடக்கையில் ஜெகதீஷின் மகள் தனது பாய் பிரண்ட் குறித்து தெரிந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.
அவரின் மரணம் குஞ்சாகோ போபனுக்கு தனது மகளின் இறப்பை நினைவுப்படுத்த தடுமாறுகிறார். எனினும் அப்பெண்ணின் இறப்பிற்கு பின்னால் யார் இருக்கிறார் என விசாரிக்கும்போது அதிர்ச்சி உண்மைகள் தெரிய வருகிறது.
தனது மகளின் இறப்பிற்கும், ஜெகதீஷின் மகளின் மரணத்திற்கும் உள்ள ஒற்றுமையை வைத்து, குற்றவாளி யார் என்பதை எப்படி குஞ்சாகோ போபன் கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
மலையாள படங்களுக்கே உரித்தான க்ரைம் த்ரில்லர் கதையாக வெளியாகியுள்ளது இந்த ஆஃபிஸர் திரைப்படம். தமிழில் வெளியான வேட்டையாடு விளையாடு, நான் மகான் அல்ல படங்களை பெரிதும் இந்த கதை நினைவுப்படுத்துகிறது.
எனினும், ஆரம்பம் முதல் இறுதிவரை சீட் எட்ஜ் நுனியில் உட்கார வைக்கிறார் இயக்குநர் ஜித்து அஷரெஃப். இடைவேளை காட்சியில் வரும் ட்விஸ்ட் துப்பாக்கி படத்தின் முக்கிய காட்சியை நினைவுபடுத்துகிறது.
குஞ்சாகோ போபன் தனது அறிமுக காட்சியில் சைக்கோ ஆபிஸராக இருப்பாரோ என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு, நகையை திருடியா பெண்ணை வயிற்றில் உதைக்கிறார். ஆனால், அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது பின்னர்தான் நமக்கு தெரிய வருகிறது.
மகளின் இறப்புக்கு தான் காரணம் என குற்ற உணர்வு ஒரு பக்கம், குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபக்கம் என நடிப்பில் அசத்தியிருக்கிறார் குஞ்சாகோ போபன். அதனாலேயே படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் காணப்படுகிறார்.
சண்டைக்காட்சிகளில் குஞ்சாகோ போபன் சிரத்தை எடுத்துள்ளதை ஹாஸ்பிடல் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகளில் தெரிகிறது. குஞ்சாகோ போபனின் மனைவியாக வரும் பிரியாமணி தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.
வில்லன்களாக வரும் நபர்கள் ஒவ்வொரு காட்சியிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடித்துள்ளனர். படத்தின் கதைக்கரு சமூகத்தின் நடக்கும் முக்கிய பிரச்னையைப் பற்றி பேசுகிறது.
போதை எந்த அளவுக்கு இளைஞர்கள் ஆட்கொண்டுள்ளது, அதனால் நடக்கும் குற்றங்களை நேர்த்தியாக காட்டிய இயக்குநரை பாராட்டலாம். ஜேக்ஸ் பியோயின் பின்னணி இசை படம் முழுக்க பரபரப்பை தக்க வைக்க உதவுகிறது. எடிட்டிங், சினிமோகிராபி சிறப்பு.
க்ளாப்ஸ்
- கதைக்களம்
- விறுவிறுப்பான திரைக்கதை
- நடிப்பு
- பின்னணி இசை
பல்ப்ஸ்
- ஹீரோ வில்லன்களை கண்டுபிடித்த பின்னும் தவறவிடுவது
மொத்தத்தில் பரபரப்பான திரைக்கதையில் அடிதடியாக மிரட்டியிருக்கிறார் இந்த ஆஃபிஸர். க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் விரும்பிகள் இப்படத்தை நிச்சயம் கண்டு ரசிக்கலாம்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
