Oru Durooha Saahacharyathil திரை விமர்சனம்

By Sivaraj Apr 16, 2026 12:48 PM GMT
Report

குஞ்சாகோ போபன் நடிப்பில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள Oru Durooha Saahacharyathil மலையாள திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்.

கதைக்களம்

கேரளாவின் திருநெல்லியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரர் மதுவுடன் (திலீஷ் போத்தன்) வாழ்ந்து வருகிறார் சேது (குஞ்சாகோ போபன்).

அரசு மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வரும் சேது, திருமணத்திற்காக பெண் பார்க்கும்போது படுத்த படுக்கையாக இருக்கும் சகோதரனை தான் கவனித்து வருவதாகவும் கூறுகிறார்.

இதற்கிடையில் மாவோயிஸ்ட் தாக்குதல் அப்பகுதியில் நடந்திருக்கும் சூழலில், மர்ம நபர் (சஜின் கோபு) ஒருவர் சேதுவின் வீட்டிற்குள் பதுங்கி இருக்கிறார்.

Oru Durooha Saahacharyathil திரை விமர்சனம் | Oru Durooha Saahacharyathil Movie Review

அவர் கையில் துப்பாக்கியை வைத்து மிரட்ட சேது அவர் சொல்வதை கேட்கிறார். அதே சமயம், இறந்த தனது மாமா மார்கோஸ் உயிருடன் இருப்பதாக நினைக்கும் மது, வீட்டில் பதுங்கி இருக்கும் நபரை மார்கோஸாக நினைத்து பேசுகிறார்.

இந்த நிலையில் போலீஸ் அதிகாரியும், சேதுவின் மாமன் மகனுமான ஆர்மியாஸ் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபடுகிறார்.

சேதுவின் வீட்டில் பதுங்கி இருக்கும் நபர் யார்? சேது மற்றும் மதுவின் நிலை என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

குஞ்சாகோ போபன் ஹீரோவாக மட்டுமல்லாமல் இப்படத்தை தயாரித்தும் இருக்கிறார். தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை காட்சிக்கு காட்சி அவர் வெளிப்படுத்துகிறார்.

குறிப்பாக மார்கோஸ் போல மாறி திலீஷ் முன் நடிக்கும் காட்சியில் மிரட்டுகிறார். அதேபோல் வெகுண்டு எழும் காட்சியிலும், கிளைமேக்சிலும் அட்டகாசம் செய்துள்ளார்.

அவருக்கு போட்டியாக மது கதாபாத்திரத்தில் திலீஷ் சிறப்பாக நடித்துள்ளார். அவரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் சஜின், ஆரம்பத்தில் பயமுறுத்தும் நபராக வந்து பின் காமெடியில் கலக்கியிருக்கிறார்.

Oru Durooha Saahacharyathil திரை விமர்சனம் | Oru Durooha Saahacharyathil Movie Review

இவர்களுக்கு அடுத்தப்படியாக 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட இயக்குநரான சிதம்பரம், அறிமுக படத்திலேயே முத்திரை பதித்துள்ளார். இவர் நல்லவரா, கெட்டவரா என்று சிறு குழப்பத்தை அவரது கதாபாத்திரம் ஏற்படுத்தினாலும், கிளைமேக்ஸ் அவர் செய்யும் விஷயம் மிரட்சி.

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், நா தான் கேஸ் கொடு படங்களை இயக்கிய ரதீஷ் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் ஒரு சில காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன. கமல்ஹாசன் படங்களை காட்டி படம் முழுக்க ரெபெரென்ஸ் வைத்துள்ளது தமிழ் பார்வையாளர்களை ஒன்ற செய்யும் வகையில் அமைந்துள்ளது.

பிளாக் காமெடியாக ஆரம்பிக்கும் படம் இரண்டாம் பாதியில் த்ரில்லர் மோடில் பயணிக்கிறது. அதனால் முதல் பாதியை ஏன் காமெடியாக கொண்டு சென்றார் இயக்குநர் என்ற கேள்வி எழுகிறது.

குஞ்சாகோ போபனின் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் மாறிய பின் படம் ரோலர் கோஸ்டர் ரைடு போல் பரபரப்பாக செல்கிறது. அதே திரைக்கதை வேகத்தை முதல் பாதியிலும் காட்டியிருக்கலாம்.

இரண்டாம் பாதியில் சில ட்விஸ்ட்கள் அருமை. ஆனால் மாவோஸ்ட் என்று இரண்டு கதாபாத்திரங்களை தமிழ் பேசும் நபர்களாக காட்டியது ஏன் என்றுதான் புரியவில்லை.

ஏதேதோ தளத்தில் படம் நகர்ந்தாலும் கிளைமேக்ஸ் திருப்திகரமாக உள்ளது. இடைவேளை காட்சியில் படத்தின் பெயரை சொல்லி, அதில் நடித்த நடிகர்களின் பெயர்களையும் கூறுவது அட மொமென்ட்.

க்ளாப்ஸ்

நடிகர்களின் பங்களிப்பு

ஒரு சில ட்விஸ்ட்ஸ்

கிளைமேக்ஸ்

பல்ப்ஸ்

முதல் பாதி தொய்வு 

மொத்தத்தில் இந்த Oru Durooha Saahacharyathil பெரிதாக ஆச்சரியப்படுத்தவில்லை என்றாலும், டைம்பாஸாக ஒருமுறை விசிட் அடிக்கலாம்.

ரேட்டிங்: 2.75/5

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US