பெத்தி: திரை விமர்சனம்
ராம்சரண், ஷிவா ராஜ்குமார், ஜான்வி கபூர் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகியுள்ள 'பெத்தி' திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

கதைக்களம்
மலைகிராமவாசியான பெத்தி (ராம்சரண்) தனது ஊர் ஆட்களுடன் சர்க்கரை ஆலையில் வேலை பார்க்கிறார். அதே சமயம், விஜயநகரத்தின் செல்வாக்கு மிகுந்த ராம்புஜ்ஜியின் (திவ்யந்து) கிரிக்கெட் அணியில் விளையாடி வெற்றிகளை பெற்று தருகிறார்.
அவர் வேலை பார்க்கும் ஆலையில் ராம்சரணின் ஊர் மக்களுக்கு மட்டும் அரைக்கூலி தான் தருகிறார் ஜான்விஜய். அதற்கு காரணமாக அவர் கூறுவது உங்களுக்கு என்று ஒரு அடையாளமே இல்லை என்பது தான்.

அதன் பின்னர் அச்சியம்மாவிற்காக (ஜான்வி கபூர்) சண்டைபோடும் பெத்தி, அதன் விளைவாக கிரிக்கெட் ஆடுகளத்தில் அவமானப்படுத்தப்படுகிறார்.
அப்போதும் அவருக்கு அடையாளம் ஒன்று இல்லை என்று கூற, குஸ்தி வாத்தியாரான கௌர்நாயுடுவிடம் சென்று பயிற்சி பெறுகிறார் பெத்தி. அதன் மூலம் அவர் எப்படி தனது ஊருக்கு அடையாளத்தைப் பெற்றுத் தந்தார் என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
உப்பென்னா என்ற வெற்றிப் படத்தை கொடுத்த புச்சி பாபு சனா இப்படத்தை இயக்கியுள்ளார். ராம்சரண் நடிப்பில் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஷிவா ராஜ்குமார், ஜான்வி கபூர், ஜெகபதி பாபு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
ஒரு ஊருக்காக போராடும் ஒருவன் எந்த எல்லைக்கு செல்வான் என்ற கதைக்கருவை இயக்குநர் படமாக்கியுள்ளார். ஆனால், தலையை சுற்றி மூக்கைத் தொடுவதுபோல் தான் முதல் பாதி நகர்கிறது. அதனால் பல இடங்களில் தொய்வை உணர முடிகிறது.
கிரிக்கெட் வீரராக அறிமுகமாகும் பெத்தி அதிலிருந்தே சாதிப்பார் என்று பார்த்தால்; பின் குஸ்தி வீரராக மாறுகிறார். சரி அதில்தான் படம் செல்லப்போகிறது என்று பார்த்தால் மேலும் வேறு தளத்திற்கு நகர்வது அயற்சியை தருகிறது.

எனினும், ஊர் மக்களின் பிரச்சனையை காட்டிய விதம் எமோஷனல் கன்னெக்ட் ஆகிறது. குறிப்பாக அப்பலசூரி என்கிற ஜெகபதி பாபுவின் கதாபாத்திரம் மனதில் நிற்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. திரைக்கதையில் சொதப்பல்கள் இருந்தாலும் முழுப்படத்தையும் பார்க்க வைப்பது ராம்சரண் என்கிற ஒற்றை நபர்தான்.
கட்டுமஸ்தான உடல், வேகமான நடன அசைவுகள், செண்டிமென்ட் காட்சிகள் தேர்ந்த நடிப்பு, சண்டைக்காட்சிகளில் வேகம் என ஆல்ரவுண்டராக அசத்தியுள்ளார். அவருக்கு அடுத்து ஷிவா ராஜ் குமார் ரங்கன் வாத்தியார் போன்ற ஒரு கதாபாத்திரத்தை அசால்ட்டாக செய்துள்ளார். ஜான்வி கபூரை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அவர் இல்லை என்றாலும் கதையில் எந்த பாதிப்பும் இருந்திருக்காது. மேலும், பெத்தி கதாபாத்திரம் ஜான்வியை பார்க்கும், அவர் குறித்து பேசுவது எல்லாம் மிகவும் அபத்தமாகவும், முகம் சுளிக்கும் வகையிலும் உள்ளன. இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்; குறிப்பாக பின்னணியில் இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஷாம் கௌஷல், மைபம் நபகன்டா மற்றும் சுப்ரீம் சுந்தர் ஆகியோர் சண்டைக்காட்சிகளை பிரமாதமாக வடிவமைத்துள்ளனர். ரத்னவேலுவின் கேமரா அசத்தல்; நவீன் நூலி எடிட்டிங்கில் கத்திரி போட்டிருக்கலாம்.
க்ளாப்ஸ்
ராம்சரண்
ஏ.ஆர்.ரஹ்மான்
சண்டைக்காட்சிகள்
கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
பொறுமையை சோதிக்கும் முதல் பாதி
திரைக்கதை சொதப்பல்
படத்தின் நீளம்
மொத்தத்தில் இந்த பெத்தி சோதனையை தாண்டினால் தான் சாதனை என்பதை, நம்மை கொஞ்சம் சோதித்து சொல்லியிருக்கிறார். கமர்ஷியல் மசாலா பட விரும்பிகள் பார்க்கலாம்.

தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri