ராவ் பஹதூர்: திரை விமர்சனம்
சத்யதேவ், தீபா தாமஸ் நடிப்பில் வெங்கடேஷ் மஹா இயக்கத்தில் வெளியாகியுள்ள ராவ் பஹதூர் தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
1991ஆம் ஆண்டில் புவனாலயம் என்ற தனது அரண்மனையில், நோய் வாய்ப்பட்ட அரசு குடும்ப வாரிசாக இருக்கிறார் ராமப்பா ராவ் பஹதூர். அவரது மனைவி ரேணுகா பல ஆண்டுகளாக அவருடன் பேசாமல் வேறொரு அறையில் இருக்க, அச்சம்மா என்ற பணிப்பெண் வீட்டு வேலைகளை செய்து வருகிறார்.
ஒருநாள் ராமப்பாவின் உடல்நிலை சரியில்லை என்று தகவல் கிடைக்க, அவரது நண்பரான டாக்டர் ஆச்சாரி அரண்மனைக்கு வருகிறார்.

அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல் பேசும் ராமப்பா, தனது மனதினை அரிக்கும் சந்தேகத்தை அவர் முன் வைக்கிறார். அதற்கு மழுப்பலாக ஆச்சாரி பதில் அளிக்க, ராமப்பா தான் செய்த ஒரு விஷயத்தை கூறி சில பொருட்களை முன் வைக்கிறார்.
அதனைப் பார்த்து ஆச்சாரி அதிர்ச்சியடைய, எப்படியாவது எனக்குள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும் ராமப்பா கூறுகிறார். அவரது சந்தேகம் தீர்ந்ததா? அவரது மனைவி ஏன் பல ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறார்? போன்ற கேள்விகளுக்கு பதில்தான் மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
கேர் ஆஃப் கஞ்சரபாலம் படம் மூலம் கவனம் ஈர்த்த வெங்கடேஷ் மஹா இப்படத்தை இயக்கியுள்ளார். சத்யதேவை வைத்து பெரிய பட்ஜெட்டில் சைக்கோலாஜிக்கல் டிராமா படமாக கொடுத்துள்ளார் மஹா.
முதல் பாதி சைக்கோலாஜிக்கலாக கதை நகர்ந்தாலும், காட்சிகளின் நீளம் நம்மை கொஞ்சம் சோர்வடைய வைக்கிறது. அதே சமயம் 1968யின் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்க இடைவேளை வருகிறது. இரண்டாம் பாதியில் எதிர்பாராத சில விஷயங்கள் நடக்க, கடைசி அரைமணிநேரம் படம் பிளாஸ்ட் ஆகிறது.
கலையமைப்பு, ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை ஆகியவை சேர்ந்து நம்மை 90கள் மற்றும் 70கள் காலகட்டத்திற்கு கொண்டு செல்ல, முழுப்படம் பார்த்து முடித்த பிறகு வேறொரு காலத்தில் வாழ்ந்த உணர்வை பெறுவோம்.

ஆனந்த் கதாபாத்திரம் அறிமுகம் ஆனதில் இருந்து குபீர் காமெடிகள் அடுத்தடுத்து வருவது செம தீனி. கிளைமேக்ஸில் வரும் ட்விஸ்ட்கள் கண்டிப்பாக மிரள வைக்கும். நடிகர்களைப் பொறுத்தவரை ராமப்பா ராவ் பஹதூராகவே சத்யதேவ் வாழ்ந்திருக்கிறார். வயதான கதாபாத்திரத்தை அவ்வளவு கச்சிதமாக சிறப்பாக செய்துள்ளார்.
அதேபோல் பிளேஷ்பேக் காட்சிகளிலும் அரச பரம்பரை வாரிசாகவே மிரட்டுகிறார். அப்பாவியான முகத்தைக் காட்டும் தீபா பிளேஷ்பேக்கில் வசீகரிக்கிறார். யதார்த்த நடிப்பை பிரமாதமாக கொடுத்துள்ளார்.
ஆச்சாரியாக வரும் விகாஸ் முப்பாலா ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் அசத்துகிறார். அச்சம்மாவாக வரும் பாலா பரசர் காமெடியில் பின்னியிருக்கிறார். ஐபிஎஸ் அதிகாரியாக சில காட்சிகளில் வந்தாலும் ஆனந்த் நம்மை சிரிக்க வைக்கிறார்.

சமரன் சாயின் இசை, கார்த்திக் பர்மரின் ஒளிப்பதிவு பிரமாதம். இயக்குநரான மஹா படத்தொகுப்பாளராகவும் வேலை பார்த்திருப்பதால், காட்சிகளின் நீளத்தை குறைக்காமல் விட்டிருக்கிறார் போல.
க்ளாப்ஸ்
சத்யதேவ்
பிரம்மாண்ட உருவாக்கம்
ட்விஸ்ட்கள்
இசை
பல்பஸ்
காட்சிகளின் நீளம்
மொத்தத்தில் இந்த ராவ் பஹதூர் ஆட்சி செய்துவிட்டார். சைக்கோலாஜிக்கல் டிராமா விரும்பிகள் கண்டிப்பாக ரசிக்கலாம்.
