நடிகர் சூர்யாவால் ராணுவத்தில் இணைந்த பெண்.. குவியும் பாராட்டுக்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை அடைந்துள்ள நட்சத்திரங்களில் ஒருவர் சூர்யா. இவருடைய நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் ஜெய் பீம் படம் வெளியானது.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தன்னால் முடிந்த வரை பலருக்கும் பல நன்மைகளை செய்து வருகிறார் சூர்யா. அந்த வகையில் இவர் நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை இதுவரை பலரையும் படிக்கவைத்துள்ளது.
அப்படி அகரம் அறக்கட்டளை மூலமாக படித்து தற்போது மாபெரும் சாதனையை புரிந்துள்ளவர் தான் கிருஷ்ணவேணி.
2011 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில், மருத்துவத்திற்கான அவரின் கட் ஆப் மதிப்பெண் 196.75. கிருஷ்ணவேணி, நூலிழையில் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழக்கிறார்.
இதன்பின் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையை பற்றி அறியும் கிருஷ்ணவேணிக்கு, திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க ஆகும் செலவை, அகரம் அறக்கட்டளை ஏற்கிறது.
கடினமான உழைப்பால் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார். 2017-ல் ராணுவத்தில் பணி கிடைத்து, அதன்பின் படிப்படியாக உயர்ந்து, தற்போது மேஜர் அந்தஸ்தில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார் கிருஷ்ணவேணி.
இதனை அறிந்த பலரும், சூர்யாவிற்கும் அவரது அகரம் அறக்கட்டளையும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
