இனி புது திரைப்படங்கள் வெளியாகாது!! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வருகிற செப்டம்பர் 1 முதல் புதிய படங்களை வெளியிடமாட்டோம் என்கிற முடிவை எடுத்துள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கம்
சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில், எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அறிக்கை
இதில், தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 8 வார காலம் கழித்துதான் ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால் தான், அந்தந்த திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க முடியும் என்று முடிவெடுத்துள்ளார்கள். மேலும், இந்த மாதிரியான முடிவு தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இல்லாதபோது, வேண்டுமென்றே தமிழ்நாட்டில் மட்டும் இந்த புதிய நடைமுறையை தன்னிசையாக புகுத்துவது கண்டிக்க தக்க ஒன்றாகும்.

இவ்வாறான முடிவினை எடுக்கும்போது தயாரிப்பாளர்களிடம் பேசி யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவண்ணம் முடிவுகளை அறிவிக்க வேண்டும். ஆனால், விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அப்படி தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவினை தயாரிப்பாளர்களான எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், வருடத்திற்கு 250 திரைப்படங்கள் வெளியாகின்றன. அதில் பெரும்பாலான திரைப்படங்களில் தயாரிப்பாளருக்கு முதலீடு செய்த தொகையில் பாதி அளவு கூட வராமல், ரூ. 700 கோடிக்கும் மேல் ஒவ்வொரு வருடமும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு பெரும் இழப்பினை சந்திக்கும் தயாரிப்பாளர்கள் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனவே விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தன்னிச்சையான முடிவினை கண்டித்து வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துவது என்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பிலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து முடிவெடுத்துள்ளது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும், மேற்படி பிரச்சனையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று,சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அவர்களிடமும் எடுத்துரைத்து தமிழ்நாடு அரசு மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உள்ளோம் என்பதையும் தெரிவித்து தெரிவித்துக்கொள்கிறோம் என அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.