உலகம் முழுவதும் பல இடங்களில் தடை செய்யப்பட்ட The Voice of Hind Rajab படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்
இஸ்ரேல் படையின் தாக்குதலில் காரில் சிக்கிக்கொண்டு போராடிய, 6 வயது பாலஸ்தீனிய சிறுமி குறித்த ஆவணப்பட நாடகம் எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை சுமார் 73,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க உதவி கோருவோர் ரெட் கிரெஸ்ஸென்ட் என்ற தன்னார்வ அமைப்பிற்கு போன் செய்வார்கள்.
அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் உதவி கோருவோர் குறித்த தகவல்களை மீட்பு படையினருக்கு தெரியப்படுத்துதல் மூலம் பலர் காப்பாற்றப்படுகிறார்கள். அந்த வகையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ரெட் கிரெஸ்ஸென்டிற்கு ஒரு அவசர அழைப்பு வருகிறது. அதில் ஒரு 6 வயது சிறுமி பேசுகிறார்.

அந்த அழைப்பினை ஏற்கும் ஒமர் (மோடஸ் மல்ஹீஸ்) சிறுமியின் வார்த்தைகளைக் கேட்டு பதை பதைக்கிறார். ஹிண்ட் ரஜப் என்ற அந்த சிறுமி காரில் இருப்பதாகவும், தன்னுட்ன் வந்தவர்கள் துப்பாக்கிச்சூட்டில் இருந்துவிட்டதாகவும் கூறுகிறாள். தான் மட்டும் தனியாக காரில் இருப்பதாகவும் அவள் கூற, துப்பாக்கியால் சுடப்படும் சத்தங்கள் கேட்கின்றன.
அதில் ரஜப் அலற, எதிர்முனையில் இருக்கும் ஒமர் பதட்டத்திற்கு ஆளாகிறார். அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பில் தன் மேலாளர் மஹ்தி உடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் ஒமர். பின்னர் சிறுமி ஹிண்ட் ரஜப் காப்பாற்றப்பட்டாரா? அவருக்கு என்ன ஆனது என்பதை இந்த ஆவண நாடக திரைப்படம் விளக்குகிறது.

படம் பற்றிய அலசல்
Beauty and the Dogs, The Man Who Sold His Skin படங்களை இயக்கிய கௌதர் பென் ஹனியா என்ற துனிசிய பெண் இயக்குநர் இப்படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தினால் இந்தியா - இஸ்ரேல் உறவு பாதிக்கப்படும் என்பதால் வெளியிட முடியாது என்ற செய்தி பரவியது. தற்போது 89 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் இந்தியாவில் வெளியாகியுள்ளது.
ஆவண நாடக திரைப்படம் என்றாலே உண்மையாக நடந்த சம்பவங்களின் காட்சிகள், புகைப்படங்கள், குரல்பதிவுகள், நேர்காணல்கள் காட்டப்படும். அதே பாணியில் உதவிக்காக மன்றாடும் 6 வயது சிறுமி ஹிண்ட் ரஜப்பின் குரல் பதிவுகளை திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
அந்த குரலை கேட்கும்போது கண்டிப்பாக நமது மனம் கணக்கும். என்னைச் சுற்றி இறந்து கிடக்கிறார்கள், துப்பாக்கியால் சுடுகிறார்கள், வந்து என்னை மீட்டு செல்லுங்கள் என்று மீண்டும் மீண்டும் அவள் கூறும்போது, ஐயோ இந்த குழந்தை தப்பிக்க வேண்டும் கடவுளே என்ற நம்மை தூண்ட வைக்கிறது.

சிறுமிக்கு உதவிட நினைக்கும் ஒமர் ஆக நடித்திருக்கும் மோடாஸ் மல்ஹீஸ், அவளை காப்பாற்ற ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று தன் இயலாமையை நினைத்து கத்துவது நாம் அந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. எப்படியாவது அவளை காப்பாற்ற வேண்டும் என அவர் செய்யும் விஷயங்கள் அவ்வளவு தத்ரூபமாக உள்ளன.
ரணா ஹஸனாக நடித்திருக்கும் சஜா கிலானி ஒரு கட்டத்தில் உடைந்து அழும்போது நாமும் கண்ணீர் சிந்திவிடுவோம். அவரது இடத்தில் உண்மையாக இருந்தவர்களின் வலியை அவர் கேமராவின் முன் கடத்துகிறார். உதவி கோருவோரின் போன் அழைப்புகளுக்கு பதில் தருபவர்களுக்கு ஏற்படும் மனவலியை போக்க, அங்கேயே மனநல ஆலோசகராக நிஸ்ரீன் ஜெரிஸ் என்ற பெண் இருக்கிறார்.
தங்களால் காப்பாற்ற முடியவில்லையே என்று கதறும் மோடாஸ், சஜாவை தேற்றும் அவர் , ஒரு கட்டத்தில் சிறுமி ஹிண்ட் ரஜப்பின் குரலால் தானும் உடைந்து விடுகிறார். அந்த கதாபாத்திரத்தை கிளாரா க்ஹவுரி செய்திருக்கிறார். அதேபோல் மேலாளர் போன்ற மஹ்தி என்ற கதாபாத்திரத்தை அமீர் லேஹெல் செய்திருக்கிறார்.

இந்த 4 பேரும் தங்கள் உணர்வுகளை திரையில் கடத்துவது, நடிப்பு போன்றல்லாமல் மிக எதார்த்தமாக இருப்பதால் அந்த வலியை நாமும் உணர்வோம். இறுதியில் சிறுமிக்கு என்ன ஆனது என்பது நம் இதயத்தை கண்டிப்பாக நொறுக்கும்.
ஜுவானின் ஒளிப்பதிவு உண்மைக்கு நெருக்கமாக காட்டியிருக்கிறது. அமினே பௌஹபாவின் இசை ரணத்தை ஏற்படுத்தும். திரைப்பட ரசிகர்கள் என்பதைத் தாண்டி, மனிதம் என்ற உணர்வை கொண்டவர்கள் கண்டிப்பாக இந்த படைப்பை பார்க்க வேண்டும்.