டாக்ஸிக்: திரை விமர்சனம்
இந்திய அளவில் டாப் ஸ்டாராக மாறியிருக்கும் யஷ் மற்றும் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி ஆகியோர் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
1947யில் இந்தியா விடுதலை பெற்றுவிட்டாலும், கோவாவில் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. சால்வடார் என்ற நபர் கேங்ஸ்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்க, அவருக்கு துணையாக ராயாவும் (யஷ்), அவரது அக்கா கங்காவும் (நயன்தாரா) உள்ளனர்.
தங்கள் பெற்றோரை கொன்றவனை பழிதீர்க்கும் ராயாவும், கங்காவும் போதைப்பொருள் கடத்தலில் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். மது, பெண்கள் என டாக்ஸிக் ஆக வாழும் ராயா, தனது பாஸ் சால்வடாரின் மகள் ரெபெக்கா (தாரா சுதாரியா) உடன் நெருக்கமாகிறார்.

இந்த விஷயம் சால்வடாருக்கும் தெரிய வந்ததும் ராயாவுக்கும், ரெபெக்காவுக்கும் திருமணம் முடிவாகிறது. அதே சமயம் கோவாவிற்கு சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த வரும் நாடியா உடனும் ராயா நெருக்கம் கொள்கிறார்.
அதன் விளைவாக நாடியா கார்ப்பமாகிறார். இது சால்வடாருக்கு தெரிய வர ராயா, கங்கா உள்ளிட்ட அனைவரின் வாழ்க்கையும் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
மலையாள திரையுலகில் ஹீரோயினாக வலம் வந்து, பின் இயக்குநராக மாறி லையர்'ஸ் டைஸ் மற்றும் மூத்தோன் ஆகிய படங்களை இயக்கியவர் கீது மோகன்தாஸ்.
அவரது இயக்கத்தில் யஷ் நடிக்கும் படம் என்பதும், நயன்தாரா மற்றும் கியாரா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி என முன்னணி நடிகைகளும் இடமபெற்றுள்ளார்கள் என்பதுமே டாக்ஸிக் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை தூண்டியது.
அதிலும் கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் இப்படத்தை இயக்கியுள்ள கீது மோகன்தாஸ், ஆக்ஷ்ன் மற்றும் எமோஷனல் டிராமாவாக இப்படத்தைக் கொடுத்துள்ளார். முதல் பாதியில் ராயா என்ற கதாபாத்திரம் எந்த அளவிற்கு டாக்ஸிக் ஆனது என்பதையும், என்னவெல்லாம் செய்யும் என்பதையும் இயக்குநர் நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார்.

காதலா, காமமாக என்று தெரியாமலேயே கியாராவுடன் பழகும் ராயா சம்பந்தப்பட்ட காட்சிகளை பல படங்களில் பார்த்திருப்போம். என்றாலும் அந்த கதாபாத்திரங்களும் பேசும் வசனங்கள் காட்சிகளுக்கு வலுசேர்க்கின்றன. கேங்ஸ்டர் படங்கள் என்றாலே வன்முறை இருக்கும். இதில் அதையெல்லாம் தாண்டிவிட்டார்கள் என்றே கூறலாம்.
குறிப்பாக கே.ஜி.எப் படத்தையே மிஞ்சும் வகையிலான வன்முறைக்காட்சிகள் உள்ளன. அதற்கும் மேல் ஆபாசம் சார்ந்த காட்சிகள் கண்டிப்பாக முகம் சுளிக்க வைக்கின்றன. லாஜிக் மீறல்கள் என்பதும் இல்லாமல் இல்லை. முதல் பாதி சற்று சுவாரஸ்யமாகவே நகர இடைவேளை 'என்ன இப்படியாகிவிட்டது' என்றே கேட்கத் தோன்றும்.
அதன் பின்னரான இரண்டாம் பாதியில் பொறுமையை சோதிப்பது படத்தின் நீளம்தான். முக்கியமான ட்விஸ்ட் வரும் வரை என்னடா நடக்குது இங்க என்றே நம்மை கேட்க வைத்துவிடுகிறார் இயக்குநர். அதனாலேயே ட்விஸ்ட் வெளியானதும் அதனை ஏற்றுகொள்ளக் கொள்ள முடியவில்லை.

சண்டைக்காட்சிகளை சற்று குறைத்து, படத்தின் நீளத்தையும் குறைத்திருந்தால் சொல்ல வந்த விஷயம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு திருப்தி அளித்திருக்கும். நடிகர்களைப் பொறுத்தவரை யஷ் பிரமாதப்படுத்தியுள்ளார். அவரது ஸ்கிரீன் பிரசென்ஸ் மிரட்டல். நயன்தாராவும், கியாராவும் அசால்ட்டாக தங்களது கேரக்டரை செய்துள்ளனர்.
ருக்மிணிக்கு அவ்வளவு பெரிய ரோல் இல்லை. தாரா மற்றும் ஹுமா குரேஷியின் கதாபாத்திரம் கச்சிதம். டெக்னிக்கலாக படம் மிரட்டலாக பிரம்மாண்டமாக உள்ளது. 1947, 1960களின் காலகட்டத்தில் கோவாவில் இருப்பது போன்ற உணர்வை தந்துள்ளனர் படக்குழுவினர். ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும், வசனங்களுக்கும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
க்ளாப்ஸ்
யஷ், நயன்தாரா, கியாரா
வசனங்கள்
சண்டைக்காட்சிகள்
இசை
பல்ப்ஸ்
நீளமான காட்சிகள்
சில லாஜிக் மீறல்கள்
பொறுமையை சோதிக்கும் இரண்டாம் பாதி
மொத்தத்தில் இந்த டாக்ஸிக் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கும் கசப்பான டானிக்.
