விமர்சனம் விண்ணை தொட்ட கதை.. தளபதி விஜய்யின் 29 வருட திரை பயணம்
1974-ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி சென்னையில் எழும்பூர் மருத்துவமனையில் எஸ்.ஏ. சந்திரசேகருக்கும், ஷோபாவிற்கும் பிறந்தவர் விஜய். விஜய் கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா பள்ளியில் தனது படிப்பை தொடங்கினார் பின் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் பள்ளியில் இணைந்தார். லயோலா கல்லூரியில், visual communication-ல் பட்டம் பெற சேர்ந்தார். இறுதியில் நடிப்பைத் தொடர ஆர்வமாக இருந்ததால் பாதியிலேயே படிப்பில் இருந்து வெளியேறினார்.
பத்து வயதில்,1984ஆம் ஆண்டு வெளிவந்த 'வெற்றி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, குடும்பம் (1984), வசந்த ராகம் (1986), சட்டம் ஓரு விளையாட்டு (1987) மற்றும் இது எங்கள் நீதி (1988) போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ரஜினிகாந்த் முன்னணி நடிகராக நடித்த நான் சிகப்பு மனிதன் (1985) படத்திலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாகத் தோன்றிய பிறகு, விஜய் தன் பதினெட்டாம் வயதில், தனது தந்தையின் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார். விஜய், விஜயகாந்த்துடன் செந்தூரப் பாண்டி (1993) படத்தில் இணைந்து நடித்தார். 1994-ல், இவர் ரசிகன் படத்தில் தோன்றினார். இளைய தளபதி என்ற அடைமொழி விஜய்க்கு வழங்கப்பட்ட முதல் படம் இதுதான்.
இவர் தேவா மற்றும் ராஜாவின் பார்வையிலே போன்ற படங்களில் முன்னணி நடிகராக நடித்தார். இதில், ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித் குமாருடன் இணைந்து நடித்தார். பின்னர் விஷ்ணு மற்றும் சந்திரலேகா ஆகிய படங்களில் நடித்தார். 1995 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் நடித்தார்.
1996 இல், விக்ரமன் இயக்கிய பூவே உனக்காகவேவில் விஜய் நடித்தார். இது அவரது முதல் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரமாகவும் இப்படம் மாற்றியது. விஜய்யின் பத்தாவது படம் வசந்த வாசல் ஆகும். அதன்பின் இவர் மாண்புமிகு மாணவன் மற்றும் செல்வா, காலமெல்லாம் காத்திருப்பேன் படங்களில் நடித்தார். 1997-ல், லவ் டுடே மற்றும் ஒன்ஸ் மோர் ஆகிய படங்களில் விஜய் நடித்தார். இதன்பின் நேருக்கு நேர் படத்தில் நடித்தார்.
காதலுக்கு மரியாதை படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது. 1998-ல் நினைத்தேன் வந்தாய், பிரியமுடன் மற்றும் நிலாவே வா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 1999 ஆம் ஆண்டில், துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடித்தார்.இப்படதிற்கு சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது. இதன்பின் விஜய் என்றென்றும் காதல், நெஞ்சினிலே மற்றும் கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய மின்சாரக் கண்ணா ஆகிய படங்களில் நடித்தார்.
2000ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து, இவரது போக்கில் ஒரு மாற்றமாக, பொழுதுபோக்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2000ஆம் ஆண்டில், இவர் கண்ணுக்குள் நிலவு, குஷி, பிரியமானவளே ஆகிய படங்களில் நடித்தார். இவரது 2001ஆம் ஆண்டு ஃப்ரண்ட்ஸ் வெளியானது. இப்படத்தில் விஜய் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். பின்னர் விஜய் பத்ரி, ஷாஜஹான் ஆகிய படங்களில் நடித்தார். 2002 இல், விஜய் தமிழன் படத்தில் நடித்தார். பின், இவர் யூத் மற்றும் பகவதி ஆகிய படங்களில் நடித்தார். விஜய் 2003ம் ஆண்டை வசீகரா மற்றும் புதிய கீதை ஆகிய படங்களுடன் தொடங்கினார்.
2003 ஆம் ஆண்டு விஜய் திருமலை என்ற படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். இப்படம் இவரை வித்தியாசமான கோணத்தில் காட்டியது. விஜய்யின் வாழ்க்கையில் திருமலை ஒரு திருப்புமுனையாகக் அமைந்தது. 2002-ல் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட உதயா, தாமதமாகி, 2004 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இறுதியாக வெளியிடப்பட்டது. தெலுங்கு படமான ஒக்கடுவின் ரீமேக் ஆக கில்லி 2004 இல் வெளியானது. தமிழ்நாட்டின் திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடியது. தமிழகத்தின் உள்மாநிலத் திரைப்பட சந்தை வரலாற்றில் ₹50 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த முதல் திரைப்படம் கில்லி ஆகும்.
இதன்பின் இவர் மதுர திரைப்படத்தில் நடித்தார். 2005 ஆம் ஆண்டில், இவர் பேரரசு இயக்கிய திருப்பாச்சியில் நடித்தார். பின் சுக்ரன் படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். ஜான் மகேந்திரன் இயக்கிய சச்சின் படத்தில் நடித்தார். பின்னர் மீண்டும் பேரரசின் இயக்கத்தில் சிவகாசி படத்தில் நடித்தார். விஜய்யின் அடுத்த படமான ஆதி 2006-ல் வெளியானது. 2007 ஆம் ஆண்டு போக்கிரி படத்தில் நடித்தார். இது தெலுங்குப் படமான போக்கிரியின் ரீமேக் ஆகும். இது 2007 ஆம் ஆண்டின் மூன்றாவது மிக அதிகமான வசூல் செய்த தமிழ் திரைப்படமாகும்.
2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பரதன் இயக்கிய அழகிய தமிழ்மகன் படத்தில் விஜய் நடித்தார். இதில் இவர் வில்லன் மற்றும் கதாநாயகன் ஆகிய இரண்டு பாத்திரங்களிலும் நடித்தார். 2008-ல், இவர் மீண்டும் தரணியின் இயக்கத்தில் குருவி படத்தில் நடித்தார். 2009 இல், மீண்டும் பிரபுதேவாவின் இயக்கத்தில் வில்லு படத்தில் நடித்தார். அடுத்து இவர் ஏ.வி.எம். தயாரிப்பில் பாபுசிவன் இயக்கத்தில் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். 2010 இல், இவர் சுறா திரைப்படத்தில் நடித்தார். இப்படி தொடர்ந்து பல தோல்வி படங்களை விஜய் கொடுத்ததால், பலரும் நடிகர் விஜய் பீல்ட் அவுட் ஆகிவிட்டார் என்றே கூற துவங்கிவிட்டனர்.
ஆனால், இதன்பின் 2011-ல் விஜய் மீண்டும் இயக்குனர் சித்திக் உடன் காவலன் படத்தில் இணைந்தார். இது விமர்சகர்களிடமிருந்தும் நேர்மறையான பாராட்டைப் பெற்றது. நல்ல வசூலும் செய்தது. அதே வருட தீபாவளியின் போது, எம். ராஜா இயக்கிய இவரது அடுத்த படமான வேலாயுதம் வெளியானது. தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் நண்பன் படம் வெளியாகி சூப்பர்ஹிட்டானது. ஆனாலும், விஜய்க்கு என்று ஒரு தனி கம்பேக் படமாக எதுவும் வரவில்லயே என்று ரசிகர்கள் ஏங்கினார்.
சொன்ன சொல் தப்பாது, வெச்சு குறி மிஸ்சே ஆகாது என்பது போல், 2012 தீபாவளி என்று வெளியான துப்பாக்கி படத்தின் மூலம் ப்ளாக் பஸ்டர் என்ட்ரி கொடுத்தார் விஜய். இப்படத்தின் விஜய்யின் திரை வாழ்க்கையில் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த படமாக அமைந்தது. ஏ. எல். விஜய் இயக்கிய இவரது அடுத்த படம் தலைவா, உலகளாவிய அளவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ல் வெளியிடப்பட்டது. ஆனால் சில அரசியல் சூழ்ச்சியினால் தமிழ்நாட்டில் மட்டும் தாமதமாக வெளியிடப்பட்டது. இதன்பின் மோகன் லாலுடன் இணைந்து ஜில்லா, ஆர். டி. நீசன் இயக்கத்தில் 2014ல் ஒரு பொங்கல் வார இறுதியில் வெளியிடப்பட்டது.
மீண்டும் கத்தியில் முருகதாஸ் உடன் பணியாற்றினார். இது 2014ம் ஆண்டின் மிக அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாகும். 2015 ஆம் ஆண்டில், புலி படம் வெளியிடப்பட்டது. இப்படம் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் இவரது அடுத்த படமான தெறி ஏப்ரல் 2016ல் வெளியிடப்பட்டது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற தெறி, 2016ம் ஆண்டின் அதிக வசூல் செய்த படம் ஆனது.
இவரது அடுத்த படமான பைரவா பரதனால் இயக்கப்பட்டது. இவரது அடுத்த படம் மெர்சல், அட்லீயால் இயக்கப்பட்டது. பல சர்ச்சைகளில் சிக்கிய மெர்சல், அணைத்து தடைகளையும் தாண்டி சூப்பர்ஹிட்டானது.இவரது படங்களில் ₹250 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த முதல் படமானது. இதனை தொடர்ந்து அரசியல் கதைக்களத்தில் சர்கார் வெளிவந்தது. பின், பிகில் வெளியாகி, ரூ. 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து கொரோனா தாக்கத்தில் 50% சதவீத இருக்கைளுடன் திரையரங்கில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூல்செய்தது. மேலும் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார். அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிக்கவுள்ளார்.
முதலில் உருவ தோற்றத்திற்காக விமர்சனம் செய்யப்பட்ட தளபதி விஜய், தற்போது பல கோடி ரசிகர்களுக்கு ரோல் மாடலாக விளங்கி வருகிறார். தன் மேல் வைத்த விமர்சனங்களை தோல்வி என்று நினைக்காமல், தோல்வி வெற்றிக்கு முதல் படி என்று எண்ணி, படி மேல் படி ஏறி, இன்று 29 வருடங்களை கடந்து, விண்ணை முட்டும் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜய்க்கு சினிஉலகத்தின் வாழ்த்துக்கள்.