தற்கொலை செய்துகொண்ட தயாரிப்பாளர் கே. ராஜன்.. காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை
கே. ராஜன்
பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை செய்துகொண்ட செய்தி திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை வண்ணாரப்பேட்டையில் இருந்து தனது காரில் ஓட்டுநருடன் கிளம்பிய அவர், கார் அடையாறு ஆற்றங்கரை அருகே வரும்போது நிறுத்துமாறு கூறியுள்ளார். சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வதாக கூறிவிட்டு சென்ற அவர், திடீரென பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சென்னை அடையாறு ஆற்றில் முதியவர் ஒருவர் குதித்துவிட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.
இதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்டு விசாரித்தபோதுதான் அவர் பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் என்பது உறுதி செய்யப்பட்டது.
போலீசார் விசாரணை
அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியாக தயாரிப்பாளர் கே. ராஜன் தனது கார் ஓட்டுனருடன் சென்றதால், அவரிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களாகவே அவர் எந்த ஒரு சினிமா நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில காலமாக அவர் தனது குடும்பத்துடன் பெரிதாக தொடர்பில்லாமல் தனியாக வசித்து வந்த கே. ராஜன், திடீரென இப்படியொரு விபரீத முடிவை எடுத்தது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.