என்றும் தமிழகம் மறக்காத தர்ம தலைவன்.. கேப்டன் விஜயகாந்த் 1952 - 2023
விஜயகாந்த் என்னும் விஜயராஜ்
1952ஆம் ஆண்டு மதுரை மாமனில் பிறந்தவர் கேப்டன் விஜயகாந்த். கே.என். அழகர்சாமி மற்றும் ஆண்டாள் அழகர் சாமி தம்பதிக்கு பிறந்தவர் இவரின் உண்மையான பெயர் விஜயராஜ் அழகர்சாமி ஆகும். விஜயகாந்த் என்னும் விஜயராஜ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் எனும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தனர்.
மதுரையில் வளர்ந்த விஜயகாந்த் சிறுவயதிலேயே சினிமா மீது மோகம் கொண்டுள்ளார். படிப்பில் ஆர்வம் இல்லாத விஜயகாந்த் தனது தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் பணிகளை செய்து வந்துள்ளார்.
சினிமா எண்ட்ரி
சினிமாவில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்துள்ளார் விஜயகாந்த். அப்போது அவருடைய பெயர் விஜயராஜ். சினிமாவிற்காக விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார் இயக்குனர் காஜா. சினிமாவில் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்தார். இதன் பலனாக கடந்த 1978ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினார்.
இதன்பின் தமிழ்நாட்டின் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இதுவரை 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். கடந்த 1991ஆம் ஆண்டு வெளிவந்த கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தான் கேப்டன் ஆக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டார்.
திருமண வாழ்க்கை
விஜயகாந்த் கடந்த 1990 ஆம் ஆண்டில் பிரேமலதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் என இருமகன்கள் உள்ளனர்.
அரசியல்
கடந்த 1993ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாக போட்டியிட்டனர். இதில் பலரும் வெற்றிபெற்றனர். இதன் காரணமாக விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்தார். இதன்பின் கடந்த 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை துவங்கினார்.
இதன்பின் 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தேமுதிக கட்சிக்கு எதிர்க்கட்சி தகுதி கிடைத்தது. 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல், கதறி அழுத பிரேமலதா.. புகைப்படங்கள் இதோ
உடல்நல குறைவு
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது மருத்துவமனை சென்று வீடு திரும்பிய விஜயகாந்தின் நிலை நாளுக்குநாள் மோசமாகி கொண்டே போனது. இது தமிழக மக்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்தது. மீண்டும் அவர் கேப்டனாக கம்பிரத்துடன் எழுந்து நிற்க வேண்டும் என தமிழக மக்கள் வேண்டி வந்த நிலையிலும், அவர் உடல்நலம் தேறவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை கவலைக்கிடம் ஆனது. ஆனால், அதன்பின் அவர் உடல் நிலை சரியாகி வீடு திரும்பினார். தேமுதிக சார்பில் பொதுக்குழு கூட்டம் கூட்டி அனைவரையும் சந்தித்தார்.
இதன்பின் இந்த அதிகாலை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் நுரையீரல் செயலிழந்து போக விஜயகாந்த் மரணமடைந்தார் என தகவல் வெளிவந்தது. இவருடைய மரண செய்தி தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
தர்ம தலைவன்
தன்னை தேடி வரும் ஒவ்வொருவருக்கும் வயிறு நிறைய சாப்பாடு போட்டவர் விஜயகாந்த். அதே போல் தனது படப்பிடிப்பில் தான் என்ன உணவு சாப்பிடுகிறேனோ, அதே சாப்பாடுதான் படப்பிடிப்பில் பணிபுரியும் ஒவ்வொரு நபரும் சாப்பிட வேண்டும் என கூறுவார்.
அதே போல் உதவி என்ற தன்னை தேடி வருபவர்களுக்கும் அள்ளிக்கொடுத்த கர்ணன் என்ற பெயரையும் பெற்றார். விஜயகாந்த் என்ற மாமனிதரை பற்றி யாரிடம் கேட்டாலும் முதலில் அவர்கள் அனைவரும் கூறுவது, வயிறார சாப்பாடு போட்ட மனிதன் என்று தான். அப்படி அனைவருடைய வயிறையும், மனதையும் குளிர்வைத்த கேப்டன் விஜயகாந்த் இன்று நம்முடன் இல்லை என்பது மிகப்பெரிய துயரம் தான்.
கேமரா ஃபோகஸ் இருக்கிறதா என பார்த்து உதவி செய்யும் பலரையே மக்கள் சில ஆண்டுகள் நினைவில் வைத்திருக்கும் பொழுது, எந்த பயனையும், எந்த பப்ளிசிட்டியையும் எதிர்பார்க்காமல் உதவி செய்த விஜயகாந்தை தமிழ்நாடு என்றும் மறவாது..