கட்டா குஸ்தி 2nd ரவுண்டு: திரை விமர்சனம்
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி 2022-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு பின் கட்டா குஸ்தி 2nd ரவுண்டு திரைப்படம் வெளியாகியுள்ளது. மக்களின் மனதை வென்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தை பார்க்கலாம், வாங்க.

கதைக்களம்
முதல் பாகத்தின் இறுதியில் குழந்தை பிறந்த பிறகு கூட தனது மனைவி கீர்த்தியை (ஐஸ்வர்யா லட்சுமி) மல்யுத்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற துணையாக இருப்பார் விஷ்ணு விஷால் (வீரா). அதிலிருந்து இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது.
மல்யுத்தம் மற்றும் வேலை என இரண்டிலும் கவனம் செலுத்த, House husband-ஆக சமைப்பது, வீட்டு வேலை செய்வது என வீட்டையும், குழந்தையையும் பார்த்துக்கொள்கிறார் விஷ்ணு விஷால். மறுபுறம் மாநிலத்தில் சிறந்த மல்யுத்த வீராங்கனையாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி விரைவில் சர்வதேச அளவில் மல்யுத்தப் போட்டியில் கலந்துகொள்ள தயாராகி வருகிறார்.

ஐஸ்வர்யா லட்சுமியின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் அவருடைய பயிற்சியாளர், ஐஸ்வர்யாவை இனி இந்த விளையாட்டில் விட்டுவைக்க கூடாது என முடிவு செய்து, சில சூழ்ச்சிகளை செய்கிறார். இதில் விஷ்ணு விஷால் சிக்கிக்கொள்ள, ஐஸ்வர்யாவிற்கும் விஷ்ணுவுக்கும் இடையே பிரச்சனை ஆரம்பமாகிறது.
ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யாவின் தோல்விக்கே விஷ்ணு விஷால் தான் காரணமாக மாறிவிடுகிறார். ஆனால், இது அவருக்கே தெரியாமல் பயிற்சியாளரின் சூழ்ச்சியால் நடந்தது. இந்த பிரச்சனையால் இருவரும் பிரிய, இவர்களின் குழந்தை பெற்றோர்களின் பிரிவால் மனமுடைந்துபோகிறது.

இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? ஐஸ்வர்யா - விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்தார்களா? சர்வதேச அளவில் மல்யுத்தம் போட்டிக்கு ஐஸ்வர்யா தேர்வாகினாரா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
இயக்குநர் செல்லா அய்யாவு எப்படி முதல் பாகத்தை எமோஷனலாகவும், குடும்ப பிரச்சனைகளையும், Women Empowerment பற்றியும் திரைக்கதையில் அழகாக வடிவமைத்திருந்தாரோ, அதே போல் இப்படத்திலும் சுவாரஸ்யம் குறையாத அளவிற்கு சிறப்பான திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். அதற்கு பாராட்டுக்கள்.
படத்தின் ஆரம்பத்தில் தொடங்கி, இறுதி வரை திரைக்கதை சிறப்பாக செல்கிறது. ஆனால், பல இடங்களில் இதுதான் நடக்கப்போகிறது என்பதை நம்மால் எளிதாகவும் கணிக்க முடிகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி இதுவாகத்தான் இருக்கும் என்பது தெளிவாகவே தெரிந்துவிட்டது.

இருப்பினும், ஒவ்வொரு காட்சிகளையும் இயக்குநர் அமைத்த விதமும், அதில் இருந்த சுவாரஸ்யமும், நகைச்சுவையும் நம்மை அழகாக திரைக்கதையோடு பயணிக்க வைத்தது. குறிப்பாக இரண்டாம் பாதியில், விஜய்யின் 'அப்படி போடு' பாடல் வரும் இடம், கருணாஸ் - லிஸ்ஸி ஆண்டனி காட்சிகள், குடும்பத்திற்குள் நடக்கும் கலாட்டா, கிளைமாக்ஸ் சண்டை காட்சி என செம Fun Ride தான்.
கதாநாயகன் விஷ்ணு விஷால் முதல் பாகத்தை போலவே இப்படத்திலும் நடிப்பில் பட்டையை கிளப்பிவிட்டார். அதே போல் ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பிலும் எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால், இவர்களை தாண்டி குழந்தையாக நடித்த குழந்தை நட்சத்திரம் நடிகை சாரா நடிப்பு நம் அனைவரையும் கவர்ந்துவிட்டது.

மேலும், கருணாஸ், லிஸ்ஸி ஆண்டனி, கருணாகரன், முனீஸ்காந்த், காளி வெங்கட், மோக்ஷா, யோகி பாபு என அனைவரின் நடிப்பும் சிறப்பு. கேமியோ ரோலில் வந்த நடிகை ரம்யா கிருஷ்ணனும் தனது நடிப்பால் திரையரங்கை அதிர வைத்துவிட்டார். ஒளிப்பதிவு, எடிட்டிங், சண்டை காட்சிகள் சிறப்பு. ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.
பிளஸ் பாயிண்ட்
சுவாரஸ்யமான திரைக்கதை
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, சாரா நடிப்பு
நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
நகைச்சுவை காட்சிகள்
இரண்டாம் பாதி
மைனஸ் பாயிண்ட்
கணிக்க முடிந்த காட்சிகள், குறிப்பாக கிளைமாக்ஸ்.
மொத்தத்தில் இந்த கட்டா குஸ்தி 1st ரவுண்டில் மட்டுமல்லாமல் 2nd ரவுண்டிலும் பட்டையை கிளப்பிவிட்டது. கண்டிப்பாக குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கலாம்.
