பிரம்மாண்ட பொருட்செலவில் பிரபாஸ், மோகன் லால், அக்ஷய் குமார், விஷ்ணு மஞ்சு ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள 'கண்ணப்பா' திரைப்படம் நம்மை கவர்ந்ததா என்று பார்ப்போமா.
கதைக்களம்
இரண்டாம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் காளஹஸ்தி பகுதியில் தின்னா (விஷ்ணு மஞ்சு) தனது இன மக்களுடன் வாழ்ந்து வருகிறார்.
சிறு வயதில் தனது நண்பன் நரபலி கொடுக்கப்பட்டதை நேரில் பார்த்த தின்னா, கடவுளே இல்லை எல்லாம் வெறும் கல்தான் என்று கூறி தெய்வ நம்பிக்கை இல்லாமல் வளர்கிறார். அதே சமயம் மஹாதேவ சாஸ்திரி பிறரை அனுமதிக்காமல் வழிபட்டு வரும் வாயுலிங்கத்தை கைப்பற்ற ஒரு கூட்டம் காளஹஸ்தி பகுதிக்கு வருகிறது.
இதற்கிடையில், பார்வதி தேவி சிவபெருமானிடம் உங்களை கல் என்று கூறிக்கொண்டு இருக்கும் தின்னா எப்படி உங்கள் பக்தனாக மாறுவான் என்று கேட்க, அவன் ஒருமுறை எனது பெயரை சொல்லி அழைத்தால் போதும் என்று அவர் பதிலளிக்கிறார்.
இந்த நிலையில், மிகப்பெரிய படையை சமாளிக்க தின்னாவின் அப்பாவான சரத்குமார், 5 இனக்குழுக்களும் ஒன்றாக வேண்டும் என அழைக்கிறார். அப்போது தின்னாவால் அங்கு பிரச்சனை ஏற்பட, அவரை சரத் குமார் தங்கள் பகுதியை விட்டு வெளியேற்றுகிறார்.
அதன் பின்னர் காலமுகனின் படையை தின்னா வென்றாரா? கடவுளை அவர் எப்படி நம்பி பக்தனாக மாறினார்? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
சிவ பெருமானுக்கு கண்களை கொடுத்த கண்ணப்ப நாயனாரின் கதைதான் இந்த 'கண்ணப்பா'. தற்போதைய ஆந்திர பிரதேசத்தின் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகாளஹஸ்தியில் நடந்ததாக கூறப்படும் புராண கதையை கற்பனை சேர்த்து கதை, திரைக்கதை எழுதியுள்ளார் படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சு.
நடிகர் மோகன் பாபு தயாரிக்க முகேஷ் குமார் சிங் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். அக்சய் குமார் சிவனாகவும், காஜல் அகர்வால் பார்வதிதேவியாகவும் நடித்துள்ளனர். கௌரவ வேடங்களில் பிரபாஸ், மோகன் லால் ஆகியோர் நடிக்க, தின்னா எனும் கண்ணப்பனாக விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ்தான் என்றாலும், முடிந்தவரை அதனை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கடவுளை வெறுக்கும் ஒருவன் எப்படி மனம் மாறி, தனது கண்களையே எடுத்து கடவுளின் சிலைக்கு கொடுக்கிறான் என்பதுதான் கதை என்றாலும் 3 மணிநேரத்திற்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் விஷ்ணு மஞ்சு.
முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இடைவேளை நெருங்கும்போது நிமிர வைக்கிறது. அதன் பின்னரான இரண்டாம் பாதி வேகமெடுக்கிறது.
விஷ்ணு மஞ்சு தின்னாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் மிரட்டும் அவர், ரொமான்ஸ், எமோஷன் என எல்லாவற்றிலும் தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். குறிப்பாக கிளைமேக்சில் அட்டகாசம் செய்திருக்கிறார். அதேபோல் பிரபாஸ் வரும் காட்சிகள் கூஸ்பம்ஸ் மொமெண்ட்தான். அவர் பேசும் வசனங்கள் சிறப்பு.
'தாயின் புனிதமான கருவறையில்தான் நீங்களும் நானும் பிறந்தோம்', 'என்னால் முடிந்தவற்றைத்தான் இறைவனுக்கு படைக்க முடியும்', 'மனித இரத்தத்தை கேட்பது கடவுளா' என பெரும்பாலான வசனங்கள்தான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. சிவனை அனுதினமும் வணங்கும் பெண்ணாக நடித்திருக்கும் பிரீத்தி முகுந்தன், கடவுள் கல் என்று கூறும் விஷ்ணு மஞ்சுவிடம் வாக்குவாதம் செய்யும் சீன் செம டச்.
அதேபோல் பிரீத்தியிடம் 'பக்தியை வலிந்து திணிக்கக்கூடாது' என பிரபாஸ் விளக்கம் கொடுக்கும் காட்சியும் அருமை. படத்தின் நீளம் என்பது பலருக்கும் குறையாக தோன்றலாம். போர் காட்சிகள், விஷ்ணு மஞ்சுவை வெளியேற்றுவது போன்றவை பாகுபலியை நினைவுபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை.
படத்தின் கதைக்கு ஒட்டாததுபோல் தோன்றுவது மோகன் லால் வரும் காட்சிதான். எனினும் அந்த காட்சியும் நம்மை ரசிக்க வைக்கிறது. ஸ்டீபன் தேவஸியின் இசை திரைக்கதைக்கு வலுசேர்க்கிறது. அந்தோணியின் எடிட்டிங் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். கிளைமேக்சில் ஸ்கோர் செய்யும் மோகன் பாபு, சரத்குமார், மதுபாலா, தேவராஜ், ஐஸ்வர்யா ஆகியோர் தங்களுடைய ரோலினை கச்சிதமாக செய்துள்ளனர்.
வெட்டவெளியில் இருக்கும் வாயுலிங்கத்தை பாதுகாப்பதாக கூறுவது, சண்டைக்கு தயாராகாமல் ஹீரோ ரோமன்ஸ் செய்வது என ஆங்காங்கே உள்ள குறைகளை இயக்குநர் சரிசெய்திருக்கலாம். என்றாலும் புராண கதையை குடும்பமாக ரசிக்கும் வகையில் எடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.
க்ளாப்ஸ்
வசனங்கள்
கிளைமேக்ஸ்
மேக்கிங்
பின்னணி இசை
பல்ப்ஸ்
படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்
ஒரு சில லாஜிக் மீறல்கள்