சர்தார் 2: திரை விமர்சனம்
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து உருவாகி கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 உருவாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள இப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.
ஆனால், அதற்கு முன் சர்தார் முதல் பாகத்தின் கதையை சற்று பார்ப்போம்.
சர்தார் கதைக்களம்
சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு 'ஒன் நேஷன் ஒன் பைப்லைன்' என்கிற திட்டத்தை வில்லன் மகாராஜ் ரத்தோர் இந்தியாவில் கொண்டு வருகிறார். இந்த திட்டம் கேட்க நன்றாக இருந்தாலும், இது முற்றிலும் மக்களுக்கு எதிரான ஒன்றாகும். இந்தியாவில் உள்ள மொத்த தண்ணீரையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மக்களை அல்லோலப்பட வைக்க வேண்டும் என்பதே மகாராஜ் ரத்தோரின் திட்டமாகும்.
இதனை கண்டுபிடிக்கும் லைலாவை (சமீரா தாமஸ்) வில்லன் கும்பல் கொண்டுவிடுகிறது. அவருடைய மரணத்தில் ஏதோ மர்மம் உள்ளது என்று அறியும் கார்த்தி (விஜய பிரகாஷ்), உண்மை என்னவென்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். ஆனால், இந்த 'ஒன் நேஷன் ஒன் பைப்லைன்' திட்டத்தை ஒரே ஒருவரால் மட்டுமே முடியும், அவர்தான் சர்தார் என யுகி சேது சொல்கிறார்.

இந்தியாவால் பயிற்சி கொடுக்கப்பட்டு தலைசிறந்த உளவாளியாக இருந்தவர் இந்த சர்தார். தனது குடும்பத்தை விட நாடும், நாட்டின் எதிர்காலமும் தான் முக்கியம் என்று கருதி, மிகப்பெரிய தியாகத்தை செய்து தேச துரோகி என்கிற பட்டத்தையும் வாங்கிக்கொண்டார். மேலும், சர்தாரின் குடும்பத்தை மகாராஜ் ரத்தோர் கொன்று குவித்தான். இவன் செய்த துரோகத்தினால் 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சர்தாரிடம் எப்படியாவது 'Code Red' போய் சேர வேண்டும் என முயற்சிக்கின்றனர்.
அவர்களுடைய முயற்சியின் பலனாக அந்த 'Code Red' சர்தாரிடம் போய் சேர, சிறையில் உடனடியாக தப்பித்து வரும் சர்தார், 'ஒன் நேஷன் ஒன் பைப்லைன்' திட்டத்தை தனது மகனுடன் சேர்ந்து முறியடிக்கிறார். இருப்பினும் தன்னை பற்றிய உண்மை வெளி உலகிற்கு தெரியவேண்டும் என்று 'Once a spy, Always a spy' என கூறிவிட்டு சென்றார். இதன்பின் போலீசில் இருந்து நீக்கப்பட்ட விஜய பிரகாஷ், RAW-வில் Spy ஏஜென்ட்டாக இணைந்தார்.

இதன் தொடர்ச்சியாக சர்தார் 2 எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
சர்தார் 2 கதைக்களம்
கதையின் ஆரம்பமே RAW, 'வால்ரஸ்' எனும் ஏஜென்ட்டை தேடி கொண்டு இருக்கிறது. கார்த்தியும் அந்த 'வால்ரஸ்' என்பவரை தேடி செல்ல, வில்லன் எஸ்.ஜே. சூர்யாவின் அடியாட்களும் அவரை தேடி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிடுகிறார்.
ஆனால், இறப்பதற்கு முன், கத்தி வடிவில் உள்ள சாவி ஒன்றை கார்த்தியிடம் கொடுக்கிறார். இது என்ன? இதற்கு பின் என்ன ரகசியம் உள்ளது என்பதை தேட ஆரம்பிக்கும் கார்த்தி, இதேபோல் இன்னும் இரண்டு சாவிகள் உள்ளன என்பதையும், இந்த மூன்று சாவிகளும் 'Bio apocalypse' உருவாக்கும் ஒரு விஷயத்தை திறக்க உதவும், அதை தேடித்தான் எஸ்.ஜே. சூர்யா வருகிறார்; மனித குளத்தில் பாதியை அழிப்பதே அவருடைய திட்டம் என்பதையும் அறிந்துகொள்கிறார்.

தன்னிடம் ஒரு சாவி உள்ளது, மீதமுள்ள இரண்டு சாவிகளை தேட ஆரம்பிக்கும் கார்த்தி, இந்த கதை இப்போது ஆரம்பிக்கவில்லை, 1981-லேயே தொடங்கிவிட்டது என்று கண்டறிகிறார். மேலும், இந்த பேரழிவு 1981-ஆம் ஆண்டு நடக்காமல் தடுக்க உதவியது தனது தந்தை சர்தார் என்கிற உண்மையும் கார்த்திக்கு தெரிய வருகிறது.
நாட்டை காப்பாற்றினாலும், அந்த Bio weapon-இன் கசிவால் கிராம மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். 3000 பேர் கொண்ட கிராமத்தில் வெறும் 54 நபர்களை மட்டும்தான் சர்தார் கொண்டு வந்த மாற்று மருந்தை வைத்து காப்பாற்ற முடிகிறது. கிராம மக்கள் அனைவரையும் காப்பாற்றுவேன் என வாக்கு கொடுத்தேனே என்னால் முடியவில்லையே என இந்த குற்ற உணர்ச்சி சர்தார் கடுமையாக பாதிக்கிறது.

1981-ஆம் ஆண்டு தடுக்கப்பட்ட பேரழிவை மீண்டும் எதற்காக தற்போது நிகழ்த்த வேண்டும் என எஸ்.ஜே. சூர்யா நினைக்கிறார்? அவர் இதை செய்ய என்ன காரணம்? 'Bio apocalypse' நடக்காமல் சர்தார் தடுத்தாரா இல்லை? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
சர்தார் முதல் பாகத்தில் தண்ணீரால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதனால் ஆண்டுக்கு எவ்வளவு குழந்தைகள் இறந்து போகிறார்கள் என்பதை பற்றியும் காட்டியிருந்தார் இயக்குநர் பி.எஸ். மித்ரன்.
சர்தார் 2-ஆம் பாகத்தில் 'Colistin' என்கிற antibiotic (நுண்ணுயிர் எதிர்ப்பி) நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு பெரிய விஷயத்தை ஏற்படுத்தி வருகிறது; இதனால் வருங்காலம் எவ்வளவு பெரிய அழிவை சந்திக்க நேரிடும் என்பதை பற்றி காட்டியுள்ளார். அதை அவர் எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, நிழல்கள் ரவி ஆகியோரை வைத்து சொன்ன விதம், அந்த காட்சி அமைந்திருந்தது எல்லாம் மிகச்சிறப்பாக இருந்தது. அந்த காட்சியில் நம்மை சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்திருந்தார். சொல்ல வந்த விஷயத்தை பக்காவாக இயக்குநர் சொல்லியிருந்தாலும், படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம் என தோன்றியது. மேலும், எமோஷனல் கனெக்ட் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.

கதாநாயகன் கார்த்தி, சர்தாராகவும் மகன் விஜய பிரகாஷாகவும் இரண்டு கதாபாத்திரங்களையும் சிறப்பாக செய்துள்ளார். குறிப்பாக சர்தார் பிளாஷ்பேக் காட்சிகள், இடைவேளை என்ட்ரி, ஆக்ஷன் காட்சிகள் என பட்டையை கிளப்பியுள்ளார்.
வில்லன் எஸ்.ஜே. சூர்யா வழக்கம் போல் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இவரால் மட்டும்தான் இப்படி நடிக்க முடியும் என்று, தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறார். குறிப்பாக யோகி பாபு, நிழல்கள் ரவியுடன் எஸ்.ஜே. சூர்யாவிற்கு இருக்கும் காட்சிக்கு திரையரங்கில் கைதட்டல்கள் பறந்தன.

மாளவிகா மோகனன் தனக்கு கொடுக்கப்பட்ட ஏஜென்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து நம் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் நாசர், ஆஷிகா ரங்கநாத், அவினாஷ், பாபு ஆண்டனி, யோகி பாபு, நிழல்கள் ரவி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்திற்கு தேவையான விஷயத்தை நன்றாக செய்துள்ளனர்.
ஆக்ஷன் காட்சிகள் படத்தில் மிரட்டலாக இருந்தன. அதேபோல் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-இன் பின்னணி இசை, டெக்னிக்கல் ஒர்க்ஸ் என அனைத்தும் சூப்பர்.
பிளஸ் பாயிண்ட்ஸ்
- கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பு
- நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
- கதைக்களம் 'Colistin' என்கிற antibiotic குறித்து படத்தில் பேசியது
- கதாபாத்திர வடிவமைப்பு
மைனஸ் பாயிண்ட்ஸ்
- படத்தின் நீளம்
- இன்னும் வலுவாக எமோஷனல் கனெக்ட் இருந்திருக்கலாம்
மொத்தத்தில் இந்த சர்தார் 2 மிஷன் வெற்றிகரமாக நிறைவேறியது.
