என் அப்பா ஒரு வேளை சாப்பிட்டு பள்ளி சென்றார், ஆனால் நான்.. கல்வி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு
தமிழக அரசின் கல்வி விழா
நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழக அரசின் கல்வி விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசினார்.
சிவகார்த்திகேயன் பேச்சு
அவர் பேசியதாவது: திரைப்பட விழா என்றால் எதையாவது பேசிவிட்டு போய்விடலாம். இங்கே அப்படி பேச முடியாது. உலகளவில் எதுவெல்லாம் பெரிய செல்வம் என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் விட பெரிய செல்வம் கல்விதான். என்னுடைய அப்பா ஒரு வேளை சாப்பிட்டு பள்ளி சென்று படித்ததால், நான் மூன்று வேளையும் சாப்பிட்டு பள்ளிக்கு சென்றேன். என்னுடைய அப்பா நடந்து பள்ளிக்கூடத்துக்கு சென்றதால், நான் ஆட்டோ, ரிக்ஷா, பஸ், ரயில் மூலம் பள்ளிக்கூடத்துக்கு சென்றேன். ஒரு தலைமுறையில் ஒருவர் படித்தால் அதற்கு அடுத்து வரும் தலைமுறைகள் நன்றாக இருக்கும். இதை என்னுடைய குடும்பத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன்.
என்னுடைய அப்பாவுடைய வீட்டில் இருந்த வசதியால் அவர் நினைத்த படிப்பை படிக்க முடிக்கவில்லை, கிடைத்த படிப்பைத்தான் படித்தார். அவர் ஒரு டிகிரி வாங்கினார். அவருடைய மகனான என்னை பி.இ., எம்.பி.ஏ.. என்று இரண்டு டிகிரி படிக்க வைத்தார். என்னுடைய அக்கா எம்.பி.பி.எஸ்.., எம்.டி., எப்.ஆர்.சி.பி என மூன்று டிகிரி முடித்துவிட்டார்.
சினிமா துறை மிகவும் சவாலானது. அங்கு சவால்கள் வரும்போதெல்லாம் எனக்கு வரும் ஒரு தைரியம் என்னவென்றால் என்னிடம் 2 டிகிரி இருக்கிறது. இங்கிருந்து என்னை அனுப்பினால் ஏதாவது வேலை செய்தாவது பிழைத்துக்கொள்ள முடியும். நான் நன்றாக படித்தேன். ஆனால், சினிமா மீதான ஆர்வத்தால் இங்கே வந்துவிட்டேன்.
தற்போது அரசின் திட்டங்களால் பயன் பெறும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும், இத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றிக்கொண்டிருக்கும் அரசுக்கும், முதலமைச்சருக்கும் என்னுடைய நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
வாழ்க்கையில் வெற்றி பெற, காசு நிறைய சம்பாதிக்க, வீடு, கார் வாங்க, அனைவரின் முன்பு கவுரமாக வாழ ஒரே தீர்வு நன்றாக படிப்பது மட்டும்தான். மதிப்பெண்ணுக்காக கொஞ்சம் படியுங்கள். வாழ்க்கைக்காக நிறைய படியுங்கள்" என கூறியுள்ளார்.