ரசிகர்களால் மட்டுமே எல்லாமே சாத்தியமாகிறது.. பெருமையுடன் பேசிய நடிகை ஸ்ரீலீலா
சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா, 'ரசிகர்களால் மட்டுமே எல்லாமே சாத்தியமாகிறது' என்று பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ரீலீலா
தனது நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ரீலீலா. இதில் நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. புஷ்பா 2 திரைப்படத்தில் கிஸிக் என்கிற பாடலுக்கு இவர் ஆடிய நடனம் படுவைரலானது.

தெலுங்கில் தொடர்ந்து படங்கள் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ள ஸ்ரீலீலா, தமிழில் பராசக்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பெரிதும் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், ஸ்ரீலீலாவின் நடிப்பிற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதுவரை இவருடைய நடனத்தை பார்த்து வியந்த ரசிகர்கள், முதல் முறையாக ஸ்ரீலீலாவின் நடிப்பை பாராட்டினார்கள்.

இதனை தொடர்ந்து, தற்போது தனுஷுடன் இணைந்து ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், பாலிவுட் திரையுலகில் கால்பதித்துள்ள நடிகை ஸ்ரீலீலாவின் முதல் ஹிந்தி திரைப்படத்தையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ரசிகர்கள் பற்றி பேசிய ஸ்ரீலீலா
இந்நிலையில், நடிகை ஸ்ரீலீலா தனது ரசிகர்கள் குறித்து பேசியுள்ளார். அதில், "ரசிகர்களை நேரடியாக சந்திக்கும்போது அவர்கள் காட்டும் அன்பும், ஆரவார வரவேற்பும் என்னை திக்குமுக்காட செய்கிறது. நான் பணம் சம்பாதிக்கும்போதும், புகழை அடையும்போதும் கூட இந்த மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ரசிகர்களால் மட்டுமே எல்லாமே சாத்தியமாகிறது. இத்தகைய அன்பை பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதற்கான நடிகையாக இருப்பதற்கே நான் பெருமைப்படுகிறேன்" என கூறியுள்ளார்.
