வணங்கான் படத்திலிருந்து வெளியேறிய சூர்யா.. திடீரென பிரிந்த சூர்யா - பாலா கூட்டணி
வணங்கான்
பாலா இயக்கத்தில் சூர்யா புதிதாக நடித்து வந்த திரைப்படம் 'வணங்கான்'. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், திடீரென சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக படப்பிடிப்பு நின்றுபோய்விட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், அது உண்மையில்லை என்று கூறினார்கள். இதன்பின் படப்பிடிப்பு துவங்குவதாக இருந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'வணங்கான்' திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகியுள்ளாராம். இது குறித்து இயக்குனர் பாலா தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.
பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் :
என தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான்' என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும் இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்துவிட கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே 'வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்து முடிவு இது.
'நந்தா'வில் நான் பார்த்த சூர்யா, 'பிதமாகன்' படத்தில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி வணங்கான் படப்பணிகள் தொடரும்..