மன்னிப்பு கேட்க வேண்டும்.. கண்டித்த நீதி மன்றம்! கமல் ஹாசன் கடிதம்
தமிழில் இருந்து பிறந்த கன்னடம்
தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கமல் ஹாசன் பேசினார். இதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தக் லைஃப் திரைப்படத்தை கன்னடத்தில் வெளியிட தடை விதித்தனர்.
இதன்பின், தனது தக் லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பாதுகாப்பு வழங்க கோரி, காவல் ஆணையருக்கு உத்தரவிட கோரிய மனு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்த வழக்கை நீதிபதி நாகப்பிரசன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து, கமல் ஹாசனை கண்டித்துள்ளது. கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கமல் ஹாசன் கூறியுள்ளார். அவர் வரலாற்று ஆய்வாளரா? கன்னட மக்களின் மனம் புண்படுகிறது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் மனு பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு வேண்டுமா, வேண்டாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். ஆனால், அதற்கு முன், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். வரலாற்று ஆய்வாளர் ஆதாரங்களுடன் கூறியிருந்தால், விவாதத்திற்குரியதாக இருந்திருக்கும். ஆனால், இப்போது கமல் பேச்சை திரும்ப பெற முடியாது. மன்னிப்பு கேட்காமல் திரும்ப பெற முடியாது என நீதிபதி நாகப்பிரசன்னா தெரிவித்து இருக்கிறார்.
மேலும் உங்கள் கருத்தால் நடிகர் சிவராஜ்குமாருக்கும் பிரச்சனை. மன்னிப்பு கேட்பது பற்றி யோசித்து, மதியம் 2.30 மணிக்கு ஆஜராகுங்கள். நானும், 'தக் லைஃப்' படத்தை பார்க்க விரும்பினேன். ஆனால், இந்த பிரச்சனையால் பார்க்க முடியவில்லை. யாருடைய மனதையும் புண்படுத்த கூடாது என்று கூறியுள்ளார்.
வருத்தம் தெரிவித்த கமல்
இந்த நிலையில், இதுகுறித்து கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் ஹாசன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த கடிதத்தில் "தக் லைஃப் பட விழாவில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனையளிக்கிறது. பட விழாவில் வந்து கலந்துகொண்ட சிவராஜ்குமாரின் மீதான அன்பின் வெளிப்பாடாகவே அப்படி பேசினேன். அந்த பேச்சால் அவர் தர்மசங்கடங்களுக்கு உள்ளானதற்கு வருந்துகிறேன். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற அர்த்தத்தில்தான் நான் அப்படி பேசினேன். கன்னட மொழியின் வளமான பாரம்பரியத்தில் எந்த சர்ச்சையோ விவாதமோ இல்லை. தமிழை போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாக போற்றும் ஒரு பெருமைமிக்க இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது" என கூறியுள்ளார்.
மேலும், "தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு கேட்க வேண்டும், தவறாக புரிந்து கொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்பது" என தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் கமல் தரப்பில் இருந்து வெளியிட்ட நிலையில், "விளக்கம் என்ன சரிதான், ஆனால், கடிதத்தில் மன்னிப்பு என்கிற வார்த்தை மட்டும் விடுபட்டுள்ளது" என கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri
