தக் லைஃப் திரைவிமர்சனம்
38 ஆண்டுகளுக்கு பின் மணிரத்னம் - கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் தக் லைஃப். நாயகனுக்கு பின் இவர்கள் இருவரும் இணைந்ததே இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
மேலும் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
கமல் ஹாசன் கேங்க்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் தகராறில், சிம்புவின் தந்தை கொல்லப்படுகிறார். சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்த சிம்பு, அதே தகராறில் தனது தங்கையையும் விட்டு பிரிக்கிறார்.
தந்தையை இழந்து நிற்கும் சிம்புவை எடுத்து வளர்த்து தனது சாம்ராஜ்யத்தின் இலவரசனாகிறார் கமல். தனது அடுத்தபடியாக சிம்பு தான் என அறிவிக்கிறார். இந்த சமயத்தில் கமல் ஹாசன் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது.
இதில் காயப்படும் கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சிம்பு தான் இதை செய்தார் என சந்தேகப்படுகிறார். இதனால் மனமுடைந்து போகும் சிம்பு, கமல்ஹாசன் மீது இருந்த நம்பிக்கையை இழக்கிறார்.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி நாசர், ஜோஜு ஜார்ஜ், பகவதி ஆகியோர் சிம்புவின் மூலம் கமலை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். அதன்படியே அவரை மலை உச்சியில் கீழே தள்ளிவிட, கமல் இறந்துவிட்டார் இனிமேல் 'நான் தான் இங்க ரங்கராய சக்திவேல்' என கூறி கமல் இடத்தை பிடிக்கிறார் சிம்பு.
இதன்பின் என்ன நடந்தது, கமல் மீண்டும் வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
நாயகனுக்கு பின் கமல் - மணிரத்னம் இணைவதால் இப்படத்தின் மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இருவரும் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
மெதுவாகவும் செல்லும் திரைக்கதை, சுவாரஸ்யம் இல்லா காட்சிகள், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு என பல விஷயங்களில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம். படத்தின் தொடக்கம் சிறப்பாக இருந்தாலும், அதன்பின் அதனை எடுத்து சென்ற விதம் போர் அடிக்கிறது.
குறிப்பாக முதல் பாதி திரைக்கதை நம் பொறுமையை சோதிக்கிறது. த்ரிஷாவின் கதாபாத்திரம் எதற்காக படத்தில் இருக்கிறது என்று சுத்தமாக தெரியவில்லை. அதே போல் படம் நம்முடன் எமோஷனலாகவும் கனெக்ட் ஆகவில்லை.
நாயகன் படத்தின் எமோஷன் நம்முடன் கனெக்ட் ஆனதால்தான் அந்த படம் இன்று வரை நம்முடைய மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அந்த எமோஷனல் கனெக்ட் இப்படத்தில் இல்லை. அதுவே மிகப்பெரிய மைனஸாக அமைந்துள்ளது. மேலும் மணிரத்னம் படம் என்றாலே வசனங்கள் மனதை தொடும். ஆனால், அப்படி எதுவும் இப்படத்தில் இல்லாதது வருத்தம்.
கமல் ஹாசன் மற்றும் சிம்பு இருவரும் தங்களது நடிப்பில் படத்தை முழுமையாக தாங்கி நிற்கின்றனர். குறிப்பாக சண்டை காட்சிகளில் இருவரும் பட்டையை கிளப்பி விட்டனர். அதற்கு ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பு அறிவுக்கு தான் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு சண்டை காட்சியையும் வெறித்தனமாக செதுக்கியுள்ளனர்.
அதே போல் ஜோஜு ஜார்ஜ், அபிராமி ஆகியோரின் நடிப்பு நன்றாக இருந்தது. இவர்களை தவிர்த்து மற்றவர்களின் யாருடைய கதாபாத்திரமும் ரசிக்கும்படி இல்லை.
இயக்குநர் மணிரத்னம் தான் நம்மை ஏமாற்றி விட்டார், சரி ஏ.ஆர். ரஹ்மானாவது நம்மை காப்பாற்றுவார் என பார்த்தால், அவரும் நம்மை கைவிட்டுவிட்டார். முத்த மழை பாடல் படத்தில் இடம்பெறாமல் போனதே மிகப்பெரிய ஏமாற்றம். மேலும் பின்னணி இசையும் நன்றாக இல்லை. ஏனென்றால் ரஹ்மான் எந்த அளவிற்கு திறமையானவர், அவரால் எந்த அளவுக்கு சிறப்பான தரமான பின்னணி இசையை தரமுடியும் என ரசிகராக நமக்கு தெரியும். ஆனால், அதை செய்யாதது பெரிய ஏமாற்றத்தை தருகிறது.
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் நம்மை திருப்திப்படுத்தவில்லை. டெக்னிகலாக படம் இன்னும் பலமாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது.
பிளஸ் பாயிண்ட்
கமல் & சிம்பு நடிப்பு
சண்டை காட்சிகள்
மைனஸ் பாயிண்ட்
சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு
த்ரிஷா ரோல்
ஏ.ஆர். ரஹ்மான்
மொத்தத்தில் தக் லைஃப் ஏமாற்றம்

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri
